பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஒன்றில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வில் இன்று (03.07.2025) மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய சைதாப்பேட்டை மேஜஸ்ட்ரேட்டை நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். 

அதன்படி இன்று மாலை 04:00 மணிக்குச் சம்பந்தப்பட்ட மேஜஸ்ட்ரேட் நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை ஏன் பதிவு செய்யவில்லை?. வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது?” என மாஜிஸ்ட்ரேட்டிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு மாஜிஸ்ட்ரேட், “சம்மன் அனுப்பியும் கூட அந்த சம்மனை காவல்துறை திருப்பி அளித்து விட்டனர்” என விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதி, “இது போன்ற மோசடிக்கு காவல்துறையினர் நீதிமன்றத்தையும் உடந்தையாக்குகின்றனர். 

வாக்குமூலம் பதிவு செய்ய வந்தவரான இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள். குற்றவாளிகள் கூட இந்த அளவுக்குத் துன்புறுத்தவில்லை. குறிப்பிட்ட மேஜஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தான் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என எந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மன உளைச்சலில் வரும் பாதிக்கப்பட்டவர்களை அருவருக்கத்தக்க வகையில் நடத்தும் காவல்துறையினர் சட்டத்தில் உள்ளதைச் செய்ய மறுத்து தெனாவெட்டாக செயல்படுகின்றனர். சட்டத்தின்படி செயல்படாமல் நாங்கள் வைத்துத்தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறை செயல்படுகின்றனர். 

இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா?. அரசும் இது போன்று காவல்துறை அதிகாரிகளுக்கு ஆதரவாக இருப்பது துரதிஷ்டம். இதுபோல் செயல்படும் காவல்துறை அதிகாரியை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படும் இந்த வாக்குமூலம் பதிவிற்காகப் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சைதாப்பேட்டை மேஜஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டதோடு காவல்துறைக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.