Skip to main content

ஆளுநரின் வேலை என்ன? - ராஜ்பவன் விளக்கம்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

What is the job of the governor? Description of Raj Bhavan

 

இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார். 

 

அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஸ்டெர்லைட் நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர்” எனக் கூறியிருந்தார். மேலும் அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்துக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உட்பட பெரும்பாலான கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், ‘மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா மீது முடிவெடுக்க அரசியலமைப்பின் 200வது விதியின்படி ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் உள்ளன. முதலாவதாக, மசோதா சரியாக இருந்தால் ஒப்புதல் தரலாம். 2வது, மசோதா சரியில்லை என்றால் நிறுத்தி வைக்கலாம். அது கிட்டத்தட்ட நிராகரிப்பதாகவே அர்த்தம். இதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது. மூன்றாவது, மசோதா மீதான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பி வைக்கலாம். ஆளுநர் மூன்றாவது வாய்ப்பை பயன்படுத்த காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள சட்டத்திற்கு இணையாக ஒரு மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தால் அது குறித்த முடிவை தான் எடுக்காமல் அதை இறுதி செய்வது குடியரசுத் தலைவர் என்பதால் அதை அவரது பார்வைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கிறார்.

 

குடியரசு தலைவர் அத்தகைய மசோதா மீது முடிவெடுக்க இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தலாம். ஒன்று அவர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவார். இரண்டாவதாக அதை நிறுத்தி வைப்பார். விதிவிலக்காக இரண்டு வித மசோதாவை ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியாது. ஒன்று அன்றாட செலவினம் தொடர்பான பண மசோதா. 2வது சட்டப்பேரவை அதன் வரம்புக்கு உட்படாத மசோதாவை நிறைவேற்றியதாக ஆளுநர் கருதினால், தமது கருத்துக்களுடன் அந்த மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பலாம்.

 

அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டு மீண்டும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். அதுதான் ஆளுநரின் அரசியலமைப்பு நிலைப்பாடு. அரசியல் ரீதியாக மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சி செய்யும்போது ஆளுநர் பதவி வகிப்பவர், அரசியல் ரீதியாக செயல்படுகிறாரோ என்ற பார்வை இருக்கும். அரசியலமைப்பின்படி ஆளுநரை நியமிப்பது குடியரசுத் தலைவர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் தான் ஆளுநரின் தலைவர். இதை அரசியலமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இதில் எந்த பிரச்சனையும் எழவில்லை. உங்களுடைய கடமையை நீங்கள் சரியாக ஆற்ற வேண்டும். அவ்வளவுதான் என ஆளுநர் ரவி பதிலளித்தார்’ என்று பதிவிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்