
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த சித்தம்பூண்டி அருகே உள்ள கிராமம் குளத்துப்பாளையம் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நாமக்கல் மாவட்டம், நல்லூர் காவல் நிலைய எல்லையில் இன்று (08.06.2025) அதிகாலை குளத்துப்பாளையம் பகுதியில் சாமியாத்தால் என்ற மூதாட்டி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வாய் மற்றும் கழுத்து பகுதியில் வெட்டப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக மூதாட்டி உயிருக்கு போராடிய நிலையில் உள்ளதாக வரப்பட்ட தகவலின் பெயரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி சம்பவம் நடந்தவுடன் தன்னுடைய உறவினர் மற்றும் மகனுக்கும் போன் செய்து யாரோ இருவர் தன்னை வெட்டி விட்டதாக கூறியுள்ளார். தன்னிடம் அந்த அடையாளம் தெரியாத நபர்கள் நகை பணம் வேண்டும் என்று கேட்டதாக அவர் யாரிடமும் கூறவில்லை. மேலும் அவரின் நகை பணம் அனைத்தும் அப்படியே இருந்தது. அவருடைய காதில் உள்ள கம்மல் உள்ளிட்டவையும் அப்படியே இருந்தது. இன்று காலை முதல் ஒரு சில காட்சி செய்தி ஊடகங்களில் (News video channels) அவர் ஆதாயத்திற்காக வெட்டப்பட்டதாக உண்மைக்கு மாறாகவும், புலன் விசாரணை பாதிக்கும் வகையிலும், பொது மக்களுக்கு குழப்பம் விளைவிக்கும் வகையிலும் சில தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
சிகிச்சையில் இருந்த மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இறந்து விட்டார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக பரமத்தி வேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நான்கு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புலன் விசாரணை முடியும் முன்பே இவ்வாறாக தவறான தகவல்களையும், புலன் விசாரணைக்கு குழப்பம் விளைவிக்கும் வகையிலும் சமூக (Social Media) மற்றும் காட்சி ஊடகத்திலும் (News channels) தவறான தகவல்களை யாரும் பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.