Skip to main content

இளம் வழக்கறிஞர்கள் அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் எவை? -பார்கவுன்சில் அறிவிப்பு!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020
What are the eligibility requirements for young lawyers to receive state scholarships?-bar Council Announcement!

 

தமிழ்நாடு அரசு அறிவித்த ரூ. 3000 உதவித் தொகையை இளம் வழக்கறிஞர்கள் பெறுவதற்கான தகுதியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அறிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இளம் வழக்கறிஞர்களுக்கு, ரூ.3000 உதவித் தொகை, இரண்டு ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் என்று,  தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அவரது அறிவிப்புக்கு, பார்கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்த உதவித்தொகையை பெறுவதற்கான தகுதியை, தமிழ்நாடு பார்கவுன்சில் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் பேசினார்.

“தமிழ்நாடு முதல்வர், இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3,000 உதவித்தொகை வழங்குவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்ததற்கு முதலில் வழக்கறிஞர்கள் சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உதவித்தொகையை பெற, இளம் வழக்கறிஞர்கள் கீழ்கண்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

 

1.தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட  கல்லூரியில் சட்டம் படித்திருக்க வேண்டும்.

2. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

3. பார்கவுன்சிலில் பதிவு செய்து மூன்று வருடங்களுக்குள் இருக்க வேண்டும்.

4. தமிழ்நாட்டை  பூர்வீகமாக கொண்டிருக்க வேண்டும்.

5. ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதி படைத்த இளம் வழக்கறிஞர்கள், ஜூலை 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் பார்கவுன்சில் வெப்சைட்டில் உள்ளது. அதன் வழியாக, தகுதி படைத்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .