ADVERTISEMENT

புதுவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கடைகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?  -உயர் நீதிமன்றம் கேள்வி!

09:26 PM Jul 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 124 மதுபானக்கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, 4 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் ஊரடங்கின்போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், 250 கடைகளின் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

இந்நிலையில், நிரந்தரமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட மதுபானக் கடைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ள, புதுச்சேரி அரசின் இணையதளம் மற்றும் செய்தித்தாள்களில், அந்த மதுபானக் கடைகளின் விபரங்களை வெளியிட உத்தரவிடக்கோரி, பாமக காரைக்கால் மாவட்ட செயலாளர் தேவமணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது, ஊரடங்கில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கடைகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், 124 மதுபானக் கடைகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் கடைகளின் விபரங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 124 மதுபானக் கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, 4 வாரங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT