Western toilet issue sriperumbudur

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் ஐ.டி. பார்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிப்காட் ஐ.டி. கம்பனிக்கு, 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை, கடந்த 10 ஆம் தேதியன்று, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை முன்னிலையில், இந்த புதிய கட்டிடத்தைத் துவக்கிவைத்து அலுவலர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

Advertisment

ஆனால், புதிதாக கட்டப்பட்டுள்ள திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில், ஒரே அறையில் இரண்டு பேர் அமரும் வகையில் வெஸ்டன் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ள விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி பொறியாளருக்குத் தெரியுமா என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வெஸ்டன் டாய்லெட் தொடர்பான புகைப்படங்கள், சோசியல் மீடியாவில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலு "ரெண்டு ரெண்டு பேரா போய் வேலைய முடிச்சுட்டு வாங்கடா"ன்னு சொல்லும்படியான பல மீம் டெம்லேட்டை வைத்து இணையத்தைத் தெறிக்கவிட்ட வருகின்றனர்.

Advertisment

இதுகுறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா கூறும்போது ' கட்டிட பணிகள் இன்னும் முழுமையாக நடைபெற்று முடியவில்லை. சர்ச்சைக்குள்ளான இரண்டு கழிப்பறைக்கு நடுவில் மறைப்பு அமைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

Western toilet issue sriperumbudur

இந்நிலையில், தற்போது நடுவில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒரே அறையில் கட்டப்பட்ட இரண்டு டாய்லெட்களுக்கு நடுவில் தடுப்பு அமைத்து, தனித்தனியே கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி சார்பாக கட்டப்பட்ட சமுதாய கழிவறையில், ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.