Skip to main content

திருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்!

Published on 25/05/2020 | Edited on 25/05/2020

 

Wedding


மணப்பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே, புதுமணத் தம்பதிகள் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
 


சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னையில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கெங்கவல்லியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை (மே 24) காலையில் நடத்த கடந்த ஜனவரி மாதமே முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மணப்பெண், மணமகன் ஆகிய இருதரப்பு வீட்டாரும் செய்து வந்தனர்.


திருமண நாள் நெருங்கியதை அடுத்து மணப்பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் 12 பேர் கொண்ட குழுவினர், ஒரு வேன் மூலமாக சென்னையில் இருந்து கடந்த 21ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வரும் நபர்களை மாவட்ட, மாநகர எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கல்யாணக் கனவுகளுடன் சொந்த ஊர் திரும்பிய அந்த இளம்பெண்ணுக்கு, சேலம் மாவட்ட எல்லையான நத்தக்கரை சோதனைச்சாவடியில் வைத்து சுகாதாரத்துறையினர் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்தனர். 


இந்தப் பரிசோதனையில், அப்பெண்ணுக்கு நோய்த்தொற்று இருப்பது மே 23ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை, அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரைகளுடன் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரைகளையும் வழங்கி அனுப்பி வைத்தனர். 
 


என்றாலும், குறித்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தி முடிப்பதில் இருதரப்பு பெற்றோரும் உறுதியாக இருந்தனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். ஆட்சியர் ராமன், சில கட்டுப்பாடுகளுடன் திருமணத்தை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தார். 


இதையடுத்து, உள்ளூரில் உள்ள ஒரு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 24) காலை 6.30 மணியளவில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. திருமணத்தில் அதிகளவில் கூட்டம் சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்ததால், இருதரப்பில் இருந்தும் மொத்தம் 28 பேர் மட்டுமே கலந்து கொண்டு, மணமக்களை மங்கல அட்சதைத் தூவி வாழ்த்தினர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.


மணமகள், மணமகன் மற்றும் இவ்விழாவில் கலந்து கொண்ட உறவினர்கள் அனைவருமே அவரவர் வீடுகளில் தொடர்ந்து 28 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நோய்த்தொற்று ஏற்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து திருமண விழா முடிந்த ஒரு மணி நேரத்தில் மணமகள், மணமகன் ஆகியோர் அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 

http://onelink.to/nknapp


குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடத்த மனித நேயத்துடன் அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர், மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே புதுமணத் தம்பதிகள் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமும் கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.