
இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், சில நாட்களாக அதிக அளவில் கொரோனா பரவி கடந்த 1 வாரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போது இந்தியாவிலும் கொரோனா நோற்று தொற்று பரவி அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால் 1,009 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக, கேரளாவில் 430 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியிலும் 104 பேரும், தமிழ்நாட்டில் 69 பேரும் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், சில அறிவுரைகளை வழங்கினார். அதன் அடிப்படையில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி திருவிழாக்கள் போன்றவற்றில் சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தேவைப்படும் பட்சத்தில் தொற்று பரவலை தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்திருந்தார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றும், உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போடவும் தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.