Skip to main content

''எங்கள் வேட்பாளரை குதிரையில் ஏற்றி கோட்டைக்கு அனுப்புவோம்...'' -சி.பி.எம் வேட்பாளரை நெகிழ வைத்த கிராம மக்கள்!

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

cpm

 

தமிழக தேர்தல் களத்தில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தினம் தினம் ஏதாவது செய்து மக்களை கவர முயன்று வருகின்றனர். ஆனால் சில வேட்பாளர்கள் மட்டும் தான் மக்களால் தொடர்ந்து கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள். கௌரவிக்கப்படும் வேட்பாளர்கள் வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சி.பி.எம் வேட்பாளர் சின்னத்துரையும் ஒருவராக உள்ளார்.

 

10 ம் வகுப்பு பள்ளிப் படிப்பை முடித்து குடும்ப வறுமையை போக்க தினக்கூலிக்கு ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் மாதம் 50 ரூபாய் சம்பளத்துக்கு போய் சேர்ந்த நிலையில், கூடுதலாக மாதம் ரூ.20 உயர்த்திக் கொடுக்க கேட்டதால் நிறுவனம் வேலையை விட்டு தூக்க நினைக்கும் போதுதான், நமக்கென்று ஒரு சங்கம் இருந்தால் தொழிலாளிகளின் உரிமையை கேட்கலாமே என்று சி.ஐ.டி.யு கிளையை உருவாக்கி சக தொழிலாளிகளுக்காக போராடி அந்த ரூ 20 சம்பளம் உயர்வை பெற்றுத் தந்தவர் சின்னத்துரை. அடுத்தடுத்து சாமானிய மக்களுக்காக தொடர்ந்து போராடி உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர். தான் குடியிருக்கும் தெரு மக்களுக்காக வீட்டுமனைப்பட்டா, சாலையையும் கூட பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றுக் கொடுத்து பலமுறை சிறைக்கும் போய் வந்துள்ளார்.

 

பாட்டாளிகளின் போராளியாக பார்க்கும்போது அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து இன்று சி.பி.எம் மாநிலக்குழுவில் இடம்பிடித்துள்ளார். இப்படி ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக உரிமைக்காக போராடிய சின்னத்துரை, ஒரு ஓட்டு வீடும், கட்டிய வேட்டி சட்டையும் தவிர ஒருகுழி விவசாய நிலம் கூட இல்லாதவர். இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்த சொத்து என் மக்கள் தான் என்று கண்கள் பணிக்க கூறுகிறார். இப்படி ஒரு வேட்பாளரைத் தான் திமுக கூட்டணியில் உள்ள சி.பி.எம் கட்சி தேர்வு செய்து கந்தர்வகோட்டை தொகுதிக்கு தேர்தல் களத்திற்கு போட்டிக்கு அனுப்பியுள்ளது. 

 

சின்னத்துரைதான் வேட்பாளர் என்றதும் திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளில் சீட்டுக் கேட்ட அத்தனை பொறுப்பாளர்களும் மனமுவர்ந்து ஏற்றுக் கொண்டதோடு கட்சி பாகுபாடின்றி முழுவீச்சில் பணிகளையும் செய்து வருகின்றனர். ஓட்டு வீட்டில் இருந்து கோட்டைக்கு அனுப்ப நாங்கள் வேட்பு மனு தாக்கலுக்கு பணம் தருகிறோம் என்று திருச்சி, புதுக்கோட்டை தொழிலாளர்கள், திமுக உள்ளிட்ட சக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். சி.பி.எம் கட்சியும் வேட்பு மனுவுக்கான பணத்தை கொண்டு வந்தது. இவர்களையெல்லாம் தாண்டி ஒரு மாற்றுத்திறனாளி 30 கிமீ பயணித்து வந்து, ''என்னிடம் வேட்பு மனுவுக்கான பணம் உள்ளது இதை கட்டுங்கள்'' என்று அன்பால் நெகிழச் செய்த போது.. காசு கொடுத்து உணவு கொடுத்து கூட்டத்தை கூட்டி வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில் தாங்களே திரண்டு வந்து ஆதரவு முழக்கமிட்டு வேட்புமனுவுக்கும் பணம் கொடுக்கும் இந்த மக்கள் தான் என் சொத்து என நெகிழ்ந்தார் சின்னத்துரை.

 

அதன்பிறகு நடந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கும் பைசா செலவு வைக்காமல் பார்த்துக் கொண்டார்கள் கூட்டணி தோழர்கள். விளம்பரம் செய்யும் கலைக்குழு, உணவு, வாகனம் என அனைத்தையும் தங்கள் சொந்த செலவிலேயே செய்து கொண்டு கலைப்பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல தான் ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டணி கட்சியினர் சொந்தக் காசில் டீ  குடித்துக் கொண்டு வீடுவீடாக வாக்கு சேகரிக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து நெகிழும் சம்பவங்கள் கந்தர்வகோட்டை தொகுதியில் நிகழ்ந்து வரும் நிலையில், அடுத்து ஒரு பெரிய நெகிழ்ச்சியை ஒரு கிராம மக்கள் செய்திருக்கிறார்கள்.

 

கூட்டணி கட்சியினரோடு கிராமம் கிராமமாக வாக்கு சேகரிக்க சென்று வருகிறார் சின்னத்துரை. நேற்று கறம்பக்குடி ஒன்றியத்தில் திமுக மாசெ பெரியண்ணன் அரசு எம்எல்ஏ சுற்றுப்பயணத்தை தொடங்கி வைக்க பல கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்தனர். மதியம் வாண்டான்விடுதி கிராமத்திற்கு சுற்றுப்பயணம் வந்தபோது கிராம எல்லையில் திரண்டிருந்த மக்கள் பட்டாசுகளை வெடித்து மேள தாளங்களுடன் காத்திருக்க வேட்பாளர் சின்னத்துரை வந்ததும் அவரை பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கச் சொன்னபோது இருந்தவர்களும் திகைத்து நிற்க.. மகிழ்ச்சியோடு கீழே இறங்கச் சொன்ன கிராம மக்கள் அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை குதிரையில் ஏற்றி "எங்கள் வேட்பாளரை குதிரையில் ஏற்றி கோட்டைக்கு அனுப்பப் போறோம்" என்று மகிழ்ச்சியாக கூறியதோடு, ஊருக்குள் குதிரையிலேயே அமர வைத்து அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான். வெற்றி பெற்றதும் இதே குதிரையில் ஏற்றி தான் கோட்டைக்கு அனுப்புவோம் என்றனர். இதைக் கேட்டு இத்தனை அன்பு வத்திருக்கும் மக்களுக்காக ஒரு பைசா லஞ்சம் வாங்காமல் உழைப்பேன் என்று சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தார் சின்னத்துரை. 

 

தொடர்ந்து, இத்தனை வயதுக்கு இதுவரை பீச்சில் நிறுத்தப்பட்டுள்ள குதிரையில் மட்டுமல்ல திருவிழாவில் ராட்டிணத்தில் உள்ள பொய்க்குதிரைகளில் கூட ஏறியதில்லை. ஆனால் வாண்டான்விடுதி கிராம மக்கள் என்னை உயர்ரக வெள்ளைக் குதிரையில் ஏற்றி விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எப்படி இவர்களுக்கு நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை என்றார்.

 

அப்போது அங்கிருந்த மூதாட்டிகள்.. நம்ம ராஜராஜசோழன் இப்படித்தான் குதிரையில ஏறி நம்ம கந்தர்வகோட்டை வழியா புதுக்கோட்டை போவாராம். அது போல நீயும் கோட்டைக்கு குதிரையில போகனும்ய்யா.. போவாய்ய்யா என்று சொல்ல வேட்பாளர் மட்டுமின்றி கூட வந்தவர்களும் நெகிழ்ந்து போனார்கள். 

 

மக்கள் கௌரவித்து கொண்டாடும் ஒரு சில வேட்பாளர்களில் கந்தர்வகோட்டை சி.பி.எம் வேட்பாளர் சின்னத்துரையும் ஒருவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.