Skip to main content

"மக்களின் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம்!' அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

kl;

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காகவும், புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காகவும் என்.எல்.சி நிறுவனம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி ஈடுபட்டு வருகிறது.

 

இதனிடையே நிலம் கொடுப்பவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், இழப்பீடாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் 'நெய்வேலி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களைப் பறிப்பதா?' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருத்தாசலம் அருகேயுள்ள சிறுவரப்பூரில் மக்கள் சந்திப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை தலைவர் கே.பாலு,  மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

கூட்டத்தில் பா.ம.க இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது, "பாட்டன் பூட்டன் காலத்தில் இருந்து இந்த மண்ணிலேயே வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்த மண் மட்டுமே வாழ்வாதாரம். இந்த மண்ணை நம்பிதான் அவர்களும், அவர்களின் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும்  இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மண்ணை பிடுங்கி எடுப்போம் என்று என்.எல்.சி நிர்வாகம் கங்கணம் கட்டியிருக்கிறது. பா.ம.க என்றுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. நமக்கு வளர்ச்சி தேவை.  வாழ்வாதாரத்தைப் பிடுங்கி, விவசாய நிலத்தைப் பிடுங்கி வளர்ச்சி என்ற போர்வையில் என்.எல்.சி நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.  இந்த மக்கள் ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம் எனக் கூறியுள்ளார்கள். அவர்களுக்குப் பாதுகாவலராக  டாக்டர் ராமதாஸ்  இருக்கிறார். ஒரு பிடி மண்ணை மக்கள் அனுமதியில்லாமல் எடுக்க விடமாட்டோம். 

 

என்.எல்.சி நிர்வாகம் என்று இந்த மாவட்டத்திற்குள் நுழைந்ததோ அன்றே இந்த மாவட்டம் சீரழியத் தொடங்கி விட்டது.  என்.எல்.சி நிர்வாகம் 1956 ல் தொடங்கப்பட்ட நிறுவனம்.  ஒரு சில லட்சங்களை வைத்து அன்று 44 கிராமங்களில் முப்போகம் விளையும் 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி எடுத்துவிட்டார்கள். அந்த 44 கிராமத்தில் உள்ள 44 ஆயிரம் மக்கள் எங்கே செல்வது எனத் தெரியாமல் நின்றனர். அதன் பிறகு நிலத்தடியில்  இருக்கின்ற நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்பி வருகிறது. இது எங்குமே நடக்காத செயல். தன்னூற்று அதாவது ஆர்ட்டீசியன் என்பார்கள். 40, 50 வருடங்களுக்கு முன்பு தானாகத் தண்ணீர் பொங்கி ஊற்றியது. வீடு கட்ட குழி தோண்டினால் தண்ணீர் நிற்கும். இன்று 800, 1200 அடியில் தண்ணீர் உள்ளது. இதுதான் வளர்ச்சியா? 8 அடியில் இருந்த தண்ணீர் 800 அடிக்குச் சென்றதன் காரணம் இந்த என்.எல்.சி நிர்வாகம். 

 

1956 ல் ஒரு சில லட்சங்களில் முதலீடு செய்த என்.எல்.சி நிர்வாகம் இன்று அதன் மதிப்பு 54 ஆயிரம் கோடி. கடந்த வருடம் லாபம் மட்டுமே 11500 கோடி. இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் இந்த நிறுவனம் என்ன செய்தது? தண்ணீரைச் சுரண்டி விவசாயத்தைப் பாழாக்கிய நிறுவனம். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என 2008ல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு செல்கிறார்கள்.  உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தும் இன்று வரை தொழிலாளர்களை நிரந்தரமாக்கவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து அழைத்து வருகிறார்கள். இங்கு நாம் கோவணம் கட்டிக் கொண்டு சுற்றித் திரிகிறோம். இனி நாங்கள் ஏமாறத் தயாராக இல்லை. அரசியலுக்காக நான் வரவில்லை. விவசாயிகள் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அங்கே நான் ஓடோடி வருவேன். காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினோம். 

 

இன்று ஒட்டுமொத்த காவிரி டெல்டா பகுதியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் நேரத்தில் 500, 1000, 2000  தருவார்கள். அதன் பிறகு தி.மு.க வும் அ.தி.மு.கவும் வரமாட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் பா.ம.க மட்டுமே மக்களுடன் இருக்கும். ராணுவமே வந்தாலும், நிலத்தைக் கையகப்படுத்த விடமாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட விட்டுத் தரமாட்டோம். இனிமேல் பலகட்ட போராட்டம் என் தலைமையில் நடைபெற உள்ளது. தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக  49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி நிறைவேற்றவில்லை.

 

எனவே என்.எல்.சி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த என்.எல்.சி யால் இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் எந்த பயனும் கிடையாது. 1956லிருந்து நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், இருக்கின்ற வேலைகளை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி நிர்வாகத்தை மூடிவிட்டு வெளியேற வேண்டும். 11500 கோடி லாபத்தைக் கொண்டு ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற வெளிமாநிலங்களுக்குச் செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு நாமம் போடுகிறார்கள்.  என்.எல்.சியால் நிலக்கரி துகள்கள் காற்றில் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சியை பாமக எதிர்கொள்ளும். நிலம் கையகப்படுத்துதல்  வாழ்வாதார சமுதாய பிரச்சினை என்பதால் எல்.எல்.சி தனது நிலம் கையகப்படுத்துதல் முயற்சியைக் கைவிட வேண்டும்" என்றார். 

 

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ.மகேஷ், மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.கார்த்திகேயன், கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன்,  மாநில நிர்வாகிகள் மருத்துவர் தமிழரசி, அசோக்குமார், ராஜ.தனபாண்டியன், விஜய்வர்மன், மோகன், விருத்தாசலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பூங்கோதை, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.