Skip to main content

“கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம்”-சுயேட்சை உறுப்பினர் தடாலடி!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

We will boycott the meeting

 

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதும் அப்படிக் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் குழு தலைவரிடமும் அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திகைக்க வைத்து வருகிறார்கள். அதன்படி நேற்று கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு தலைவர் மேனகா விஜயகுமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணைச் சேர்மன் முனுசாமி, ஒன்றிய ஆணையர் இந்திராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கலந்துகொண்ட குழு உறுப்பினர் அதிமுக-வை சேர்ந்த மான்விழி பேசும்போது குழு உறுப்பினர்களின் பகுதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். சுயேட்சை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, உள்ளாட்சித் தேர்தல் நடப்பதற்கு முன்பு அதிகாரி கட்டுப்பாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டபோது ரூபாய் 70 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியை தற்போது ஒன்றிய பொது நிதியில் இருந்ததை மாவட்ட ஆட்சியர் நிதிக்கு அனுப்பக் கூடாது என்று ஏற்கனவே கடந்த கூட்டத்தில் கூறினோம். எங்களின் அனுமதி இல்லாமல் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 70 லட்சத்தை ஆட்சியர் பொதுநிதி அதிகாரிகள் அளித்துள்ளனர். ஏன் இப்படி நடந்தது எனக் கேள்வி எழுப்பினார்.

 

We will boycott the meeting

 

அதற்குப் பதில் அளித்த ஒன்றிய ஆணையர் இந்திராதேவி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதால் அந்த நிதி அனுப்பி வைக்கப்பட்டது என்றார். இதற்கு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர் நிதிக்கு மாற்றப்பட்ட 70 லட்சத்தை மீண்டும் ஒன்றிய பொது நிதிக்கு  மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இல்லையென்றால் அடுத்து நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று கூறிய சிவ சுப்பிரமணியன் அதற்கு அச்சாரமாக நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் வெளிநடப்பு செய்தார். அவரது கருத்துக்கு ஆதரவாகக் கூட்டத்தில் கலந்துகொண்ட 15 ஒன்றியக்குழு உறுப்பினர்களும் அவருடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கம்மாபுரத்தில் நடைபெற்ற ஒன்றிய குழுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.