Skip to main content

'சீரான குடிநீர் வேண்டும்...' - பொதுமக்கள் சாலை மறியல்

 

'We want uniform drinking water...'-Public road blockade

 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த முத்துகவுண்டம்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாரளித்தும் ஊராட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

 

இதையடுத்து இன்று காலை இந்த பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து ஈரோடு-வெள்ளகோவில் ரோடு, முத்துகவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாகத் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்றுப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !