publive-image

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என வாக்குறுதி அளித்தது. அதுபோல், ஆட்சி அமைத்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்கான ஒப்புதலை அளித்தார். இது பெண்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர்.

Advertisment

இந்நிலையில், மற்றொரு சுவாரசியமான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதி பெண்கள். ஆடி மாதத்தில் தமிழ்நாடு முழுவதுமிருந்து திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாத யாத்திரையாக பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம். இதில் பெண் பக்தர்கள் அதிகம். வழக்கம் போல இந்த வருடமும் ஏராளமான பெண்கள் மாலை அணிந்திருந்தாலும், கரோனா விதிமுறைகளால் பாத யாத்திரை செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Advertisment

அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 13 பெண்கள் சமயபுரத்து அம்மனை தரிசனம் செய்ய புறப்பட்டனர். கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடிக்கு நகரப் பேருந்தில் சென்றபோது பயணக்கட்டணம் வாங்கவில்லை. இதையே ஃபாலோ அப் செய்ய நினைத்த பெண் பக்தர்கள் 13 பேரும், ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கும் அங்கிருந்து கீரனூர் இறங்கி, அங்கிருந்து திருச்சி, அதன் பிறகு சத்திரத்தில் இறங்கி சமயபுரம் என்று நகரப் பேருந்துகளிலேயே பயணித்து ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சமயபுரம் அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நகரப் பேருந்து பயணம் செய்து வீடு வந்து சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து அந்தப் பெண்கள் கூறும்போது, “கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை போக காத்திருந்தபோதுதான் ஆலங்குடிக்கு நகரப் பேருந்து வந்தது. பேருந்தில் ஏறிய பிறகு டிக்கெட் கேட்கல.அதனால 6நகரப் பேருந்துகளில் ஏறி கட்டணமின்றி பயணம் செய்து, அதேபோல திரும்பினோம்” என்று தெரிவித்தனர்.