ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு, குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு, காவிரி மேலாண்மை வாரிய கோரிக்கை போராட்டம் ஆகிய வழக்குகள் தொடர்பாகச் சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனி பிரிவுகளில் பல்வேறு இயக்கம் மற்றும் அமைப்புகளின் தலைவர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் துறைமுக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் பேரரசு கட்சித் தலைவர் இயக்குநர் கெளதமன், இயக்குநர் அமீர், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை சரஸ்வதி, தவசி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் KM.ஷெரிப், தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், பொழிலன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேரா. சுப.வீ உள்ளிட்டோர் வர இயலாமைக்கான அனுமதி பெற்றிருந்தனர். நீதிமன்ற நிகழ்வுக்குப் பிறகு முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி, இயக்குநர்கள் கெளதமன் மற்றும் அமீர் ஆகியோருடன் மு.தமிமுன் அன்சாரி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; “நாங்கள் இன்று சந்தித்துள்ள வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுவதாகத் தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால், இதற்கான முறையான அரசாணை (G.O) இன்னும் வெளியிடப்படவில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த அறிவிப்பைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காகவே போராடினோம். தொடர்ந்து அவற்றுக்காகக் குரல் கொடுப்போம்.
நாங்கள் அமைதியாக ஜனநாயக வழியில் போராடினோம். மக்களுக்கு இடையூறு செய்யவில்லை. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க வில்லை. மக்களின் பொதுச் சொத்துக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது பிரதமர் மோடிதான். தேவையெனில் இது போன்ற வழக்குகளை அவர் மீது தான் போட வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.