தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் பொதுமுடக்க விதிகளை மீறி கடைகளை திறந்ததாகக்கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கோவில்பட்டியில் உள்ள சிறையில் அவர்கள் அடைக்கப்பட்ட நிலையில், பென்னிக்ஸ் திங்கள்கிழமை இரவும், அவரது தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த தந்தை, மகன் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அதேபோல் இதுகுறித்து ஜெயராஜின் மகள் பெர்சி கூறுகையில், அம்மாவின் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் தந்தை, சகோதரன் உடலை பெறுகிறோம். உயர்நீதிமன்ற கிளை நேரடியாக விசாரிப்பதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தந்தை சகோதரன் மீது படிந்துள்ள கைரேகை தடயம் மூலம் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.