Skip to main content

எங்கவூருக்கு அரசு கல்லூரி வேண்டும்; டிரண்டிங் ஆகும் கோஷங்கள்...!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

We need government college is trending in manaparai

 

 

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.கவினரால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மறுமலர்ச்சி திமுக தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், தமிழக முதல்வருக்கு செப்டம்பர் 13ஆம் தேதி மின்னஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.  மேலும், மணப்பாறையில் அரசு கல்லூரி வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் வலியுறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனைத் தொடர்ந்து முகநூல், வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை அட்டையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

 

சமூக வலைதளங்களில் கடந்த ஐந்து நாட்களாக இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து ம.தி.மு.க தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கத்திடம் பேசினோம். அவர் நம்மிடம், “திருச்சி மாவட்டத்தில் முறுக்குக்கும், மாட்டுக்கும் பெயர் போன ஊர் மணப்பாறை. "மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி வயல் காட்டை உழுது போடு செல்லக்கண்ணு" என்ற மருதகாசியின் பழம் பெருமை பாடலுக்கு உயிரூட்டும் ஊர் மணப்பாறை. மணப்பாறை மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை பகல் வரை நடைபெறும். தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள்.

 

We need government college is trending in manaparai


தமிழ்நாடு முழுவதும் முறுக்கு கிடைக்கும் என்றாலும், மணப்பாறை முறுக்கு உலகத் தரம் வாய்ந்தது. அதற்குக் காரணம் இந்த மண்ணில் கிடைக்கும் நீரும், கை பக்குவமும்தான். இத்தகைய சிறப்பு மிக்க மணப்பாறையில் பெரிய தொழில் சாலைகளோ, வணிக நிறுவனங்களோ இல்லை. ஆற்று வளம், ஊற்று வளம் இல்லாத வானம் பார்த்த பூமியாகும். பெருமழை காலங்களில்தான் இங்கு விவசாயம் சாத்தியம். பெரும்பாலும்  கிராமங்களின் வாழ்வாதாரம்  கால்நடை வளர்ப்பதில் இருக்கிறது. பள்ளிப் படிப்புடன் நிறுத்திய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டிட வேலை பார்ப்பதற்காக திருச்சி, கோவை ஆகிய பெருநகரங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில் கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்காக திருச்சிக்குத்தான் போகவேண்டும்.

 

மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் விளிம்பு ஒரு கிராமத்திலிருந்து திருச்சிக்கு செல்ல 90 கி.மீ பயணிக்க வேண்டும். இதனால், இப்பகுதி மாணவர்களின் கல்லூரிக் கனவு கானல் நீராய் போய் முடிகிறது. மணப்பாறை நகரத்தை சுற்றி உள்ள ஓரளவு வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே திருச்சிக்கு சென்று படிக்கின்றனர். எனவேதான், இப்பகுதி மக்கள் மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக உள்ள இந்த பகுதிக்கு உள்பட்ட முந்தைய மருங்காபுரி தொகுதியிலிருந்து 1991 - 96 களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் க.பொன்னுசாமி கல்வி அமைச்சராகவும், அதன்பின்பு 1996 - 2001 கால கட்டத்தில் வெற்றி பெற்ற புலவர் செங்குட்டுவன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளனர். இருமுறை அமைச்சர் தொகுதி என்ற தகுதியைப் பெற்றிருந்தும்கூட, மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி  அமைக்கப்படாதது இப்பகுதி மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இப்போது ஆளும் அதிமுகவைச் சேர்ந்த ஆர்.சந்திரசேகர் மணப்பாறை தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். ஆனபோதும், மணப்பாறையில் கல்லூரி கோரிக்கை கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டது. இதில், மணப்பாறையில் கல்லூரி இல்லை என்ற வருத்தம் மக்களை பெரிதும் வாட்டியது. இந்நிலையில் முகநூல், வாட்ஸ் ஆப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் "வேண்டும்.. வேண்டும்.. மணப்பாறைக்கு அரசு கல்லூரி.. வேண்டும்.. வேண்டும்" என்ற கோரிக்கை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த முழக்கத்தை எழுப்பி அந்த காணொளிகளையும் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து அவசர, அவசரமாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்களைச் சந்தித்து மணப்பாறையில் கல்லூரி அமைக்க கோரிக்கை மனு தந்துள்ளார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட அறிக்கை தந்து வலியுறுத்தியுள்ளார்.

 

மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று 20 வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் பொதுமக்களின் இந்த கோரிக்கை கட்டாயம் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும். ஆனால், கல்லூரி மட்டும் வந்தபாடில்லை. தற்சமயம், தமிழக அரசு வெளியிட்டுள்ள 7 கல்லூரி அறிவிப்பில் மணப்பாறை இல்லாதது கண்டு நாங்கள் பெரிதும் கவலையடைந்தோம். ஏற்கனவே, எங்கள் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறோம். அவசரம் கருதி 13-ஆம் தேதி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சலில் மீண்டும் ஒரு கடிதத்தை நான் அனுப்பினேன். இதனைத் தொடர்ந்து "வேண்டும்..வேண்டும் அரசு கல்லூரி வேண்டும்" என்ற முழக்கத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் டிரெண்டிங் ஆக்குங்கள் என்று பொதுமக்களின் பாதம் பணிந்து கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளுக்கு கட்சி கடந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கோரிக்கை அட்டையுடன் முழக்கம் எழுப்பி காணொளி வெளியிட்டனர்.

 

மணப்பாறை பகுதி மக்களின் இந்த பேரெழுச்சி எங்களுக்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு மணப்பாறை தொகுதி மக்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யாமல் உடனடியாக கல்லூரி அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும். நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையையும் தொடங்க வேண்டும் என்றார். எது எப்படியோ கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளங்களின் மூலம் மணப்பாறை மக்கள் தமது கோரிக்கையை அமைதியான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அம்மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குள் தமிழக அரசு கல்லூரி அமைப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்வது நல்லது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கல்லூரியில் சாதி பாகுபாடு; மூன்று பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Three professors transferred for Caste discrimination in college

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய மூன்று பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார்கள் எழுந்தன.  சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் சாதி பாகுபாடு நிலவுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து வியாசர்பாடி, கும்பகோணம் ஆகிய பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில் உண்மைத்தன்மை இருப்பதாக மாணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்தனர்.

 

அதிகாரிகளின் விசாரணையின் அடிப்படையில், வியாசர்பாடி அரசு கல்லூரியில் பணியாற்றிய ரவி மயிசின், சிவகங்கையில் பணியாற்றிய கிருஷ்ணன், கும்பகோணத்தில் பணியாற்றிய சரவண பெருமாள் ஆகிய மூன்று பேராசிரியர்களையும் நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுபோன்று அரசு மற்றும் கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே சாதிய பாகுபாடு காட்டும் பேராசிரியர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அவர்களை வேறு ஊர்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று கல்லூரி கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்துப் பேசிய கல்லூரி கல்வி இயக்குநர் கீதா, “ஆசிரியர் என்பவர் சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பேராசிரியர்களே தவறு செய்யும் போது அவர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் நாளை எப்படி சிறந்த மாணவர்களாக இருப்பார்கள். மாணவர்களுக்கு பாடம் எடுப்பது; அவர்களை தேர்வுக்கு தயார் செய்வது; அடுத்த நாள் பாடத்துக்கு தங்களை தயார் செய்வது என அந்த வேலைகளைப் பார்ப்பதற்கே கல்லூரி பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. அப்படி இருக்கையில் இதுபோன்று சமூகம் சார்ந்த விஷயங்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கும், அவர்களைத் தவறான பாதைகளில் அழைத்துச் செல்வதற்கும் அவர்களுக்கு எப்படி நேரம் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நமது பிள்ளைகள் தான் என்ற எண்ணம் பேராசிரியர்களுக்கு வர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் எங்கும் நடக்கவில்லை. இனிமேல், இதுபோன்று நடந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.