தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி துவங்கியது. இதனை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. பருவமழை துவங்கும் முன்பாகவே தமிழ்நாட்டில் ஓரளவு மழை பெய்துவந்தது. இந்நிலையில், தற்போது பருவமழையும் துவங்கியுள்ளது. ஆந்திராவிலும் மழைப் பொழிவு இருந்துவருகிறது. இதனால், பாலாற்றில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாலாற்றில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, “ஆந்திராவிலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலும் பெய்து வரும் மழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலைவனமாக காட்சியளித்த ஆற்றில் இப்போது பால் போன்று தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!
பாலாற்று தண்ணீரைக் கொண்டு அதையொட்டியுள்ள ஏராளமான ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. பாலாற்றில் கட்டப்பட்டுள்ள 3 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. நிரம்பிய தடுப்பணைகள் சுற்றுலாத்தலங்களாக மாறியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் கூடுதல் நீர் பயன்பாடின்றி கடலில் வீணாக கலக்கிறது. வினாடிக்கு 2600 கன அடி கடலில் கலக்கிறது. அதாவது 4 நாட்களுக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் வீணாகிறது. ஒரு டிஎம்சி நீரைக் கொண்டு பல ஏரிகளை நிரப்பலாம். 12 டிஎம்சி நீரைக் கொண்டு சென்னைக்கு ஓராண்டுக்கு குடிநீர் வழங்க முடியும். ஆனால், இந்த நீர் வீணாவது வருத்தமளிக்கிறது.
பாலாற்றில் 5 கிமீக்கு ஓர் தடுப்பணை கட்ட வேண்டும் என சட்டப்பேரவையிலும், வெளியிலும் பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பாலாற்றில் அறிவிக்கப்பட்ட 4 தடுப்பணைகள் இன்னும் கட்டப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் 5 கிமீக்கு ஒன்று வீதம் தடுப்பணைகளை கட்ட வேண்டும்." இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.