Skip to main content

“பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” - சிறப்பு மாநாட்டில் வலியுறுத்தல்!

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

We must ensure the safety of women

 

பாலியல் கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும் என இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு மாநில பெண் ஊழியர் சிறப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் – தமிழ்நாடு அமைப்பின் 18 ஆவது தமிழ் மாநில மாநாடு கோவை ஆர்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்கம் அரங்கில் சனிக்கிழமை துவங்கியது. 

 

இரு தினங்கள் நடைபெறும் இம்மாநாட்டின் முதல் நிகழ்வாகப் பெண் வங்கி ஊழியர்கள் பங்கேற்ற சிறப்பு மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் பி.எஸ்.ஆனந்தி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா துவக்கிவைத்து உரையாற்றினார். இதனையடுத்து அலுவலகங்களில், பயணங்களில், குடும்பங்களில் நடைபெறும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை விவாதித்தனர். 

 

We must ensure the safety of women

 

இதனைத் தொகுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.ராதிகா உரையாற்றினார். விவாதங்களை ஒருங்கிணைத்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் க.கிருட்டிணன் நிறைவுரையாற்றினார். முன்னதாக மாநாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். 

 

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் கமிட்டி (விசாக) அமைக்க வேண்டும். பெண்களுக்கான சட்ட உரிமைகள் பணியாற்றும் அலுவலகங்களில் மறுக்கப்படுவதை மாநாடு கண்டிப்பதோடு, சட்டப்படியான உரிமைகள் அளிக்கப்படுவதை வங்கி நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வங்கிப் பெண் ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ஜோதிபாரதி நன்றி கூறினார். 

 

இதனையடுத்து நடைபெற்ற பொது மாநாட்டில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தேபஷிஸ்பாசு சவுத்ரி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன் தமிழ்நாடு பொதுச்செயலாளர் க.கிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். தொடர்ந்து ஞாயிறன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய அமர்வுகள் மாநாட்டில் நடைபெற உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.