பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்தார் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென். அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி தனது தாயாரை பார்த்து ஆசி பெற்றார். குஜராத் தேர்தலின்போது கூட ஹீராபென் சக்கர நாற்காலியில் உறவினர்கள் உதவியுடன் வாக்களிக்க அழைத்து வரப்பட்டார்.அதனைத் தொடர்ந்து ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் 'தாயாரை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமரின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “தாயார் ஹீராபென்னுடன் பிரதமர் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம். தாயாரின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தை யாராலும் தாங்கிக் கொள்வது மிகவும் கடினம். பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.