
அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் வீடுகள், குடியிருப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் அனகாபுத்தூர் மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் அங்கு சென்று மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களை நேரில் சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர் தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசுகையில், ''அனகாபுத்தூரில் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர் ஆகிய மூன்று பகுதிகளையும் நீர்ப்பிடிப்பு பகுதி என்று நீதிமன்றம் அறிவித்து அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. அதனையொட்டி ஏற்கனவே மூகாம்பிகை நகரில் பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
தற்போது காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகர் பகுதிகளை இடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சூழலில் இன்று அந்த பகுதிக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். அதனையொட்டி தலைமைச் செயலாளர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் கார்த்திகேயனை சந்தித்து மக்கள் தரப்பு கோரிக்கைகளை எடுத்து வைத்தோம். நீதிமன்ற ஆணையை மீறி வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம் என்பதை தலைமைச் செயலாளர் என்னிடத்தில் விளக்கினார். என்றாலும் மக்களின் கோரிக்கைகளை கனிவோடு பரிசளிக்க வேண்டும். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம்'' என்றார்.