
இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் முருக மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்த தீர்மானங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பதாக அம்மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'எடப்பாடியை பொறுத்தவரை அண்ணாவைப் பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் அவதூறாக பேசியதன் காரணத்தால் தான் என்ன முடிவெடுத்தார் என்பது தமிழ்நாட்டின் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே இன்று இருக்கக்கூடிய விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் உறுதிமொழிகளுக்கும் அதிமுகவிற்கும் சம்பந்தமில்லை. அவர்கள் மேடையில் என்ன விதிமுறைகளை கையாளப் போகிறார்கள் என்பது நமக்கு தெரியாது. அந்த அவதூறு வீடியோ ஒளிபரப்புவார்கள் என்பதே எங்களுக்கு தெரியாது. நாங்கள் ஒளிபரப்புக்கு பின்புறத்தில் அமர்ந்திருந்த காரணத்தினால் அதைப் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் எங்கே எந்த இடத்தில் தந்தை பெரியார், அண்ணா மீது அவதூறு பரப்பினாலும் அதைத் தட்டிக் கேட்கும் வகையில் அதை நெஞ்சுரத்தோடு எதிர்த்து நிற்கும் இயக்கம் அதிமுக.

அந்த வீடியோ ஒளிபரப்புக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அழைப்பின் அடிப்படையில் முருகபக்தர் என்ற அடிப்படையில் நாகரிகம் கருதிச் சென்றோம். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கூற்றுப்படி தான் அந்த மாநாட்டில் பங்கேற்றோம். அதில் அண்ணாவிற்கே அவதூறு என்று சொன்னால் முதன் முதலாக எதிர்த்து குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக. அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் உறுதிமொழிகளும் அதிமுக ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு நாங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.