Skip to main content

'ஒரு மணி நேரத்தில் சாம்பல் தருகிறோம்...' - இருப்பிடம் நோக்கி வரும் 'நடமாடும் மயானம்'

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

'We deliver ashes in an hour...'- 'Walking Cemetery' coming towards location

 

கிராமம் முதல் நகரம் வரை இன்றளவும் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அல்லது எரியூட்ட சுடுகாடு பிரச்சனை என்பது தொடர்ந்து நீடித்தே வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற போராட்டமும் தொடரத்தான் செய்கிறது. எங்கள் ஊரில் சுடுகாடே இல்லையென்றும், மயானத்திற்கு இறந்தவர் உடலைக் கொண்டு செல்ல வழியே இல்லை என்றும், செத்தும் கூட நிம்மதி இல்லங்க என பல்வேறு அமைப்பினர் போராடுவதும் தொடர்கிறது.

 

இந்த விஞ்ஞான உலகம் எல்லாவற்றிற்கும் வழிவகை செய்து அதற்கான கண்டுபிடிப்புகளையும் கொடுத்து வருகிறது. அப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான ஒரு செயல்பாடுதான் இறந்தவர் உடலை எரியூட்ட இருப்பிடம் நோக்கி வருகிற நடமாடும் எரியூட்டும் தகன வாகனம். தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா 14 ந் தேதி மாலை ஈரோட்டில் நடந்தது. இந்நிகழ்வில் 'ஆத்மா அறக்கட்டளை' நிர்வாகிகள் வி.ராஜமாணிக்கம், சகாதேவன், இளங்குமரன், அக்னி ஸ்டீல் தங்கவேல், செங்குந்தர் பள்ளி சிவானந்தம், ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.

 

இதுகுறித்து ஆத்மா அறக்கட்டளை நிர்வாகிகள் கூறும்போது, 'ஈரோடு போன்ற நகரங்களில் மின் மயானம் உள்ளது. அதுபோல கிராமங்களிலும் மின் மயானத்தின் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தியுள்ளோம். கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலைத் தகனம் செய்ய ரூபாய் 15 ஆயிரம் வரை செலவாகும். அது மட்டுமல்லாது உடலைத் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் அல்லது ஒருநாள் தேவைப்படுகிறது.

 

'We deliver ashes in an hour...'- 'Walking Cemetery' coming towards location

 

குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என பலரும் வெளியூர்களில் பல்வேறு வேலைகளில் உள்ளார்கள். இயந்திரத்தனமாக இந்த காலகட்டத்திற்குத் தகுந்தாற்போல் எல்லோரும் பழைய வழக்கங்களை மாற்றி வருகிறார்கள். அதில் முக்கியமானது இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் என்பது போய் இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்ற நிலை வந்துவிட்டது.

 

அதற்கு ஏதுவாகத்தான் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம். இதன் மூலம் இறந்தவர் உடலை எரியூட்டி ஒரு மணி நேரத்தில் அவரின் குடும்பத்தினரிடம்  அஸ்தி (சாம்பல்) வழங்கப்படும். நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஈரோடு ஆத்மா அறக்கட்டளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி குறிப்பிட்ட ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். முழுக்க முழுக்க இவை கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும். இந்த வாகனம் ஈரோடு மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும். இந்த வாகனத்தின் சேவையைப் பெற கட்டணமாக நாங்கள் ரூபாய் 500 செலுத்த வேண்டுமென நிர்ணயித்துள்ளோம். இந்த நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை முறைப்படி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்கள் கட்டாயம் உடல் அடக்கத்திற்குத் தேவையான உறுதிமொழி படிவம், அடையாள அட்டை, தேவையான ஆவணங்கள் வழங்க வேண்டும்" என்றனர்.

 

உயிர் உருவாகி உயிர்ப்பித்து 60, 70, 90 என ஆண்டுக்கணக்கில்  வாழும் மனித உடல் இறப்புக்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் சாம்பலாகி இறந்த நாளே பால் ஊற்றும் நிலை வந்துவிட்டது மனிதர்களே...!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.