Skip to main content

''ஆன்லைன் முறை எங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கவில்லை ''-ஜல்லிக்கட்டில் முதல் பரிசை வென்ற விஜய் ஆதங்கம்

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

"We definitely don't like the online system" - Vijay Petty who won the first prize in Jallikattu

 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது நிறைவடைந்தது. இன்று காலை முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே அதிக காளைகளை பிடித்தவர் என்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 17 காளைகள் பிடித்து தொடர்ந்து இரண்டாம் பரிசை வென்றார். மதுரை விளாங்குடியை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலாஜி 14 காளைகளைப் பிடித்து மூன்றாவது பரிசை பெற்றார்.

 

முதல் பரிசு பெற்ற விஜய்க்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. மொத்தம் நடைபெற்ற 11 சுற்றுகளில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி  வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மொத்தம் 61 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலிடம் பிடித்த விஜய் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஆன்லைன் முறை எங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கவில்லை. கடைசி வரை எனக்கு டோக்கன் கிடைக்கவே இல்லை. கடைசி நேரத்தில் விளாங்குடி சித்தன் என்பவர் மூலமாகதான் எங்களுக்கு டோக்கன் கிடைத்தது. இரண்டு முறை சிறந்த பரிசு வாங்கியுள்ளான் இவனுக்கு டோக்கன் வரவில்லை என்று வாங்கி கொடுத்தார். கமிட்டி மூலமாக டோக்கன் கொடுத்தால் அவரவர்கள் திறமையை காட்டி வாங்கி மாடு பிடிப்போம். ஆனால் இந்த ஆன்லைன் முறையில்  யாரு யார் யாரோ வாங்குகிறார்கள். இ சேவை மையத்திற்கு போனால் 200 ரூபாய் கேட்கிறார்கள். படிக்காதவர்கள் எல்லாம் என்ன செய்ய முடியும். முதலமைச்சர் பரிசாக அளிக்கக்கூடிய காரை பார்த்தேன். இப்பொழுதுதான் என் வாழ்விலேயே முதன்முதலாக காரின் பக்கத்தில் போக இருக்கிறேன். மிக மிக சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.

 

ஜல்லிக்கட்டில் சிறப்பாக களமாடிய காளைக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான பரிசு மதுரையை சேர்ந்த காமேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டது. அதேபோல் வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசாக வாஷிங் மெஷின் வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் காளைக்கு மூன்றாம் பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.