Skip to main content

“திமுக அரசு செய்யும் என நூறு சதவீதம் நம்புகிறோம்..” - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

‘We believe one hundred percent that the DMK government will do ..’ Postgraduate teachers
                                                  மாதிரி படம் 

 

2021ஆம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் ஓர் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்மூலம், தான் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் அங்கு உள்ள மக்களிடத்தில் அவர்களின் பிரச்சனைகளை மனுக்களாக பெற்று, ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் அதற்கு தீர்வு காணப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி திமுக ஆட்சி அமைத்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதற்காக தனியாக ஒரு துறை அமைத்து, அதற்கு ஐ.ஏ.எஸ். ஷில்பா பிரபா சதீஷை தலைவராக நியமித்து அதற்கான பணிகளையும் நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். அதன்படி தற்போது அந்தத் துறை செயல்பட்டுவருகிறது. பல்வேறு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுவருகிறது. அதேசமயம் நீண்டகாலம் எடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. 

 

இப்படி 2021ஆம் அண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஈரோட்டில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் நிகழ்ச்சியில், 2019 - 2020 கல்வியாண்டிற்கான தேர்வு முடித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருக்கும் 1,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என சாருலதா என்பவர் மனு கொடுத்திருந்தார். தற்போது, அந்த மனுவை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடித்தத்தில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தாங்கள் கொடுத்த மனுவின், ‘கோரிக்கைக்கான பதிவு எண்: 429990’ என்பதையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.


அந்தக் கடித்தத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 2018 - 2019 ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்வுக்கான அறிவிப்பு 12.06.2019 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி செப்டமர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்ற எங்களை 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. 

 

அதன்பின், தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலை 20.11.2019 அன்று சில பாடங்களுக்கும், 02.01.2020 அன்று சில பாடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறையால் பணியாணை வழங்கப்பட்டது. அதன்படி 2018 - 2019 கல்வியாண்டிற்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால், 2019 - 2020இல் ஏற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இன்னும் எங்களை வைத்து நிரப்பப்படாமல் உள்ளன. 

 

கடந்த 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து பலமுறை சென்று கடந்த ஆட்சியிலிருந்த முன்னாள் முதல்வர், கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய இடங்களில் நேரடியாகவும், கடிதம் வாயிலாகவும் 2019 - 2020 ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கான இரண்டாவது பட்டியலை வெளியிடும்படி தொடர்ந்து கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும், பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினர். ஆனால், தேர்தல் காரணமாக பட்டியல் வெளியிடப்படவில்லை. 

 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறையில் 1,500க்கும் மேற்பட்ட முதுகலைப் பட்டதாரி காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான பணிநாடுநர்களை உடனடியாக எடுத்துத் தரும்படி அசிரியர் தேர்வு வாரியத்திடம் பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. 

 

29.01.202 அன்று சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரை சந்தித்து, எங்களுக்குப் பணி வாய்ப்பினை வழங்கிடும்படி அணுகியபோது, ‘உங்களுக்கான பணியை வழங்கும் அதிகாரம் அரசிடம் மட்டுமே உள்ளது. அதற்கான விதிகளை உருவாக்கி பணிகளை வழங்கிடலாம்’ என்று தெரிவித்தனர். 

 

11.02.2021 அன்று 2020 - 2021 ஆண்டிற்கான 2,098 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதி, சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டவர்களில் 40, 45 வயதைக் கடந்தவர்கள் 700க்கும் மேற்பட்ட தேர்வர்கள் உள்ளனர். ஆகையால் இந்த அறிவிப்பு எங்களின் ஆசிரியர் கனவை நீர்த்துப் போகச் செய்துள்ளது. ஆகையால், 2019 - 2020 கல்வியாண்டிற்கான பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம், 1,500க்கும் மேற்பட்ட எங்களை வைத்து விரைவில் பட்டியல் வெளியிட வேண்டும். அதன்பிறகு மற்றவர்களுக்குத் தேர்வு நடத்திட வேண்டும்.  

 

22ஆம் தேதி ஈரோட்டில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியின்போது சாருலதா, எங்கள் 1,500 நபர்களின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரடியாக பேசி கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கண்டிப்பாகச் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார். 

 

07.05.2021 அன்று திமுக ஆட்சியில் அமர்ந்தது. தமிழகத்திற்கும், சான்றிதழ் சாரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகிய எங்களுக்கும் வாழ்வில் விடியல் பிறக்கப்போகிறது என்று நூறு விழுக்காடு நம்பிக்கை பிறந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.