Skip to main content

10.5 சதவீத இட ஒதுக்கீடு; இடைக்காலத் தடை விதிக்க கோரிக்கை இருந்தால் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Published on 28/07/2021 | Edited on 28/07/2021
"We are currently banning, why not ban" - Judges question

 

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசாணைக்குத் தடைவிதிக்க அவசியமில்லை என்ற தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், சட்டத்தை எதிர்த்த வழக்குகளை ஆகஸ்ட் இரண்டாவது வாரம் விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

 

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பிற சமுதாயத்தினர் இதனால் பாதிக்கப்படுவர் எனவும் அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தன. இந்த வழக்குகளின் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் காலையில் முறையிடப்பட்டது.

 

அப்போது, சட்டத்துக்குத் தடை கோரிய வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனவும், சட்டத்தை அமல்படுத்தினால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, இது சம்பந்தமாக பிற்பகலில் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, தலைமை நீதிபதி அமர்வில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் சட்டம் இயற்றப்பட்டதாகவும்,  சட்டத்தை எதிர்த்து சென்னையில் 24, மதுரையில் 4, உச்ச நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டு, பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை எடுத்துள்ளதால், அதையும் கருத்தில் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.

 

குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் முதல் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும் விளக்கம் அளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த அரசாணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதாலும் அரசாணைக்குத் தடை விதிக்க அவசியமில்லை எனச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, இந்த வழக்குகளை ஆகஸ்ட் 2வது வாரத்தில் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதுடன், இடைக்காலத் தடை கோரும் கோரிக்கைகள் இருந்தால் மனுத்தாக்கல் செய்யும்படியும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.