Wayanad Landslide One more Tamil people incident

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

Advertisment

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு இரண்டாவது நாளாக இன்றும் (31.07.2024) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 163 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 216 பேரைக் காணவில்லை எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த காளிதாஸ், கல்யானகுமார் ஆகியோர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்திருந்தார்.

Advertisment

Wayanad Landslide One more Tamil people incident

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவரின் உடல் பாறை இடுக்கிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்த ஷிஹாப் சூரல் மலைப் பகுதியில் உள்ள பள்ளி வாசல் ஒன்றில் மத ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். நிலச்சரிவின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஷிஹாப் இருந்த பள்ளிவாசல் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஷிஹாப் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. சிஹாப் உயிரிழந்ததையடுத்து வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.