
கேரளாவில் பெய்த அதீத கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 191 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கேரளாவில் அடுத்து மூன்று நாளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கேரள தமிழக எல்லை மாவட்டங்களான கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் மாநில பேரிடர் மீட்பு படையால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவியை தமிழக அரசு கோரியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. தமிழகத்திற்கென மாநில பேரிடர் மீட்பு படை இருப்பினும் கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பெரும் பாடத்தை கற்றுத் தந்திருக்கும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாடுவது என்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்பதன் அடிப்படையில் தமிழக அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.