Skip to main content

பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான பாதை சபரிமலை தீர்ப்பு;திருமா வரவேற்பு!!

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

 

thiruma

 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட எந்தத் தடையும் இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்று வழிபடுவதற்குப் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. ‘அனைத்து வயது பெண்களும் அங்கு சென்று வழிபட எந்தத் தடையும் இல்லை. பக்தியில் பாலினபாகுபாடு  பார்க்கக்கூடாது’ என்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.



உயிரியல் அடிப்படையிலோ, உடலியல் அடிப்படையிலோ எந்த பாகுபாட்டையும் காட்டக்கூடாது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் ‘ஆண்கள் விரதமிருப்பதற்காகப் பெண்கள் தண்டனையை சுமக்க வேண்டுமா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அய்யப்ப பக்தர்களை தனிப் பிரிவினராகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.



சபரிமலை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாகும். ஆண்டவன் சந்நிதியில் பாலின பாகுபாடு கூடாது என்றால் சாதி பாகுபாடு மட்டும் பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது. தலித்துகள் சென்று வழிபட முடியாத லட்சக்கணக்கான கோவில்கள் இந்த நாட்டில் உள்ளன. அந்த பாகுபாட்டைக் களைவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் எனக் காத்திராமல்  அரசாங்கங்களே அதைக் களைய முன்வரவேண்டும் என வலியுறுத்துமிறோம்.  



வழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அரசு முன்வரவேண்டும். அதற்கான பாதையை இந்த தீர்ப்பு அமைத்துத்  தந்துள்ளது.



சபரிமலை வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள சிறுபான்மை தீர்ப்பில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பெரும்பான்மை தீர்ர்ப்பிலேயே விடையுள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பை விரிவான அமர்வுக்கு எடுத்துச் செல்லவோ, சீராய்வு செய்யவோ தேவையில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு எமது பாரட்டுகளைத்  தெரிவித்துக்கொள்கிறோம் என  கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும்,  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.  பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிக மிகுந்த மோசமான உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும் பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும், ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார் அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.  இந்த பிரச்சார கூட்டத்தின் வாயிலாக நான் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி. ராஜ்யசபா உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து  வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போது தான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது.  அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதை காண முடிந்தது.

பாஜக அரசை  எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய பங்காற்றுகிறார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றை எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் கவர்மெண்ட் நிச்சயம் மேற்கொள்ளும்.

தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால், மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால் உலக அளவில் குருடாயில் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது.  இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்சி எஸ்டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம் . இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன்,  காங் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.