Skip to main content

குடிநீர் பிரச்சனை, அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள் - தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நன்நேரி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 550 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 6 மாதங்களாக ஊராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கவில்லை. இதனால் பெண்கள் சுமார் 3 கிலோமீடர் தூரம் வரை சென்று குடங்களில் குடிநீரை சுமந்து வரவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் தண்ணீர் எடுக்க செல்ல முற்பட்டால் சாலை பள்ளம், குண்டும் குழியுமாக இருப்பதாலும், விளக்குகள் எரியாததாலும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

 

water scarcity

 

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அக்கிராம மக்கள் வெள்ளக்குட்டை பேருந்து நிறுத்தத்தில் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஆலங்காயம் போலீசார் மற்றும் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது. 
 

தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம், தேர்தலுக்கு முன் குடிநீர் பிரச்சனை, அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 மணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் பற்றாக்குறை; மாணவர்களுக்காக மறியலை கைவிட்ட பெண்கள்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

kallakurichi vadakananthal water scarcity incident cancel due to public exam 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சில மாதங்களாக குடிதண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர் போர்வெல் மூலம் போதுமான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சாலைப்பணியின் காரணமாக பைப்லைன் சேதமடைந்துள்ளது. இதனால் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நிர்வாகம் கண்டுகொள்ளாததால் அப்பகுதி பெண்கள் ஒன்று திரண்டு கச்சராப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் செல்லும் சாலையில் அக்ராபாளையம் மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கச்சராப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் மறியலை தொடர்ந்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்டூ தேர்வு நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் பேருந்தில் சென்று தேர்வு எழுதுவதற்கு அரசு பேருந்துகள் மூலம் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சாலைமறியலில் சிக்கிக் கொண்டனர். தேர்வு எழுதச் சென்ற மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சென்று இன்று அரசு பொதுத்தேர்வு எங்களுக்கு அனைவருக்கும் நடக்க உள்ளது. அதை எழுத முடியாவிட்டால் எங்கள் படிப்பு, வாழ்க்கை அனைத்தும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, எங்கள் அனைவரையும் உங்கள் வீட்டுப் பிள்ளைகளாக எண்ணி தேர்வு எழுதச் செல்வதற்காக பேருந்து செல்ல விடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.

 

சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் பள்ளிப்பேருந்து உட்பட அனைத்து வாகனங்களும் செல்ல போக்குவரத்திற்கு வழிவிட்டு கலைந்து சென்றனர். இதைக் கண்டு மாணவ மாணவிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களுக்கு நன்றி தெரிவித்தனர் இதையடுத்து வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலர்கள் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்வதாக உறுதி அளித்தனர்.

 

இந்த சம்பவத்தால் அக்ராபாளையம் வடக்கநந்தல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

Next Story

20 நாட்களாக வராத குடிநீர்; காலி குடங்களுடன் சாலைக்கு வந்த கிராமத்தினர் 

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

cuddalore vakkaramari village water scarcity incident 

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வக்கிராமாரி கிராமத்தில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும் குடிநீருக்காக பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செட்டிமேடு மற்றும் நாஞ்சலூர் கிராம பகுதிக்குச் சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீர் குழாய் உள்ள இடத்தில் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு குடிசை வீடு கட்டிக்கொண்டு குடிநீர் குழாயை உடைத்துள்ளதாகவும் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் - சிதம்பரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் செல்வகுமார், நகராட்சி பொறியாளர் மகாராஜன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசை வீட்டை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றி உள்ளனர்.