Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published on 10/08/2018 | Edited on 27/08/2018
th

 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி, அவ்விரு அணைகளில் இருந்தும் உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது இன்று நள்ளிரவுக்குள் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருந்தது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நான்கு அடி தண்ணீர் மட்டும் குறைந்தது. இப்போது கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைய வந்தடையும் பட்சத்தில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.

 

me


இதனால் கர்நாடகாவில் இருந்து வரும் உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாகவும், பிரதான மதகுகள் வழியாகவும் திறந்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உபரிநீர் வெளியேற்றத்தால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதையடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கு விடப்பட்டுள்ளது.


இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், ''காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சேலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆர்வம் மிகுதியால் காவிரி ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, செல்ஃபி புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் படிப்படியாக அதிகரிக்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது,'' என்றார். 


மேட்டூர் அணை நிலவரம்: இன்று (ஆகஸ்ட் 10, 2018) மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 117.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 61932 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் தேவை என்ற நிலையில், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 36424 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Order to open water in Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 4,715 ஏக்கரும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் முதல்வரிடம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேட்டூரில் பாசனத்திற்கு நீர் திறப்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.