Skip to main content

வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு-  காலம் கடந்து திறக்கப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
v

 

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக ஞாயிறன்று கும்பகோணம் அருகே கீழணையிலிருந்து தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத்  பாசனத்திற்கு தண்ணீர்  திறந்துவிட்டார். 

 

தண்ணீரை வடவாறு வழியாக வினாடிக்கு 1800 கன அடியும், வடக்கு ராஜன் வாய்காலில் வினாடிக்கு 400 கனஅடியும்,தெற்கு ராஜனில் 400 கன அடி எனவும் மொத்தம் வினாடிக்கு 2ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

v

 

கடலூர் மாவட்டத்திற்கு நேரடிப் பாசனமாக கொள்ளிடம் வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், கஞ்சன்கொல்லை வாய்க்கால் உள்ளிட்ட வாய்கால்கள் வழியாக  பாசனத்திற்கு  47 ஆயிரத்து 97 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  அதேபோல் நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு தெற்கு ராஜன் வாய்க்கால், குமுக்கிமன்னியார் வாய்கால், மேல இராமன் வாய்க்கால் உள்ளிட்ட  வாய்க்கால்கள் வழியாக நேரடிப் பாசனத்திற்கு 39 ஆயிரத்து 50  ஏக்கர் பாசனபரப்பு பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.  மூன்று மாவட்டத்திற்கும் 87 ஆயிரத்து 47 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் என்று கூறபடுகிறது. 

 

இதன் தொடர்ச்சியாக வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு ராதா மதகு வாய்க்கால் வழியாக வினாடிக்கு 10 கனஅடியும் வீராணம் ஏரியில் உள்ள இதர 33 மதகுகள் வழியாக 390 கனஅடியும் திறந்துவிடப்பட்டுள்ளது.  இதன்மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி  வட்டங்களில் 102 கிராமங்களிலுள்ள  44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.   மேலும் விவசாயத் தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பது மாற்றி அமைக்கப்படும் என தொழில் துறை  அமைச்சர் சம்பத்  தெரிவித்துள்ளனர்.

 

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) விஜயா, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப்குமார், அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், சிதம்பரம் கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு, உதவி செயற்பொறியாளர் அருணகிரி, குமார் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், தமழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி மூர்த்தி, விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ், ராதா வாய்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகி உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள்  உடனிருந்தனர். 

 

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் கூறுகையில் தற்போது  காலம் கடந்து தண்ணீர் திறந்துள்ளார்கள் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கு பலனை தராது,  ஆறுகளில் அதிக தண்ணீர் செல்லும் போது விவசாய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்திருந்தால் அது கடைமடை வரை வேகமாக அடித்துச் சென்றுஇருக்கும்.  தற்போது தண்ணீர் வேகம் குறைந்துள்ள நிலையில் திறந்து விட்டுள்ளார். கடைமடை வரையுள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரவில்லை. தற்போது திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை கொண்டு விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான அடியுரம் உள்ளிட்ட விவசாய பொருட்களை உடனே வழங்க வேண்டும்.  விவசாய கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னைக்குத் தண்ணீர் அனுப்பத் தடை!

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Veeranam Lake dried up without water supply, so forbidden to send water Chennai

கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Next Story

வீராணம் ஏரியில் நச்சுக்கலப்பா? அதிகாரிகள் விளக்கம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Officials have explained that there is no bad liquid in Veeranam Lake

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி கடந்த 10-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திருமுட்டம் வட்டப்பகுதிகளில் 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

அதே நேரத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது. இந்த ஏரியில் நச்சு கலந்துள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பிரசிடென்சி கல்லூரி ஆய்வாளர்கள் கடந்த 2018-19 ஆண்டில் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் ஒரு லிட்டர் குடிநீரில் 1 மைக்ரோ கிராமுக்கு மேல் நச்சுகள் இருக்க கூடாது என உலக சுகாதார மையம் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது என்றும், ஆனால் வீராணம் ஏரியில் 1 லிட்டர் நீரில் 17.72 மைக்ரோகிராம் முதல் 19.38 கிராம் வரை நச்சுகள் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபனிடம் கேட்டபோது, “வீராணம் ஏரியை சுற்றி எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை, நச்சுகழிவுகள் கலக்க வாய்ப்பில்லை. இவர்கள் தண்ணீர் மிகவும் குறைந்த நேரத்தில் எடுத்துள்ளார்களா? என்று தெரியவில்லை. தற்போது வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் நல்ல முறையில் உள்ளது. இதனை விவசாயத்திற்கு அளித்து வருகிறோம். தண்ணீர் குறித்த ஆய்வை நாங்கள் மேற்கொள்ள முடியாது” என்றார்.

இந்த தகவல் குறித்து சென்னை மெட்ரோ வாட்டர் செயற்பொறியாளர் ராம்ஜியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு முறையும் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்போது தண்ணீரை பலமுறைகளில் சுத்திகரித்து அனுப்பி வருகிறோம். வீராணம் ஏரியில் எந்த ஒரு நச்சும் இல்லை. எனவே தண்ணீரை சோதனை செய்து தான் எடுக்கிறோம்” என்றார்.

அதேபோல் கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப்பொறியாளர் அனந்தராயன் கூறுகையில், “வீராணம் ஏரியை சுற்றி எந்த நச்சு கழிவுகள் கலக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த தகவல் வெளிவந்த பிறகு பொதுமக்களுக்கு அச்சத்தை தீர்க்கும் வகையில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை சாம்பிளுக்கு எடுத்துச் சென்று ஆய்வகத்தில் கொடுத்துள்ளோம். ஆய்வகத்தில் இருந்து ரிசல்ட் வந்தவுடன் இதுகுறித்து முழுத்தகவலும் வெளியிடப்படும்” என்றார்.

வீராணம் ஏரியில் நச்சு உள்ளது என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை விரைவில் மாவட்ட நிர்வாகம் கலைய செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.