Skip to main content

சென்னையில் தண்ணீர் பஞ்சம்... இலவசமாக குடிநீர் விநியோகித்த நாம் தமிழர் கட்சியினருக்கு முன்னாள் கவுன்சிலர் மிரட்டல்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

சென்னை திருமுல்லைவாயலில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கிய நாம் தமிழர் கட்சியினரை புரட்சிபாரதம் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இலவச குடிநீர் வழங்க மூன்று நாட்களுக்கு முன்பு முன் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறையினர் விதித்திருக்கும் வினோத கட்டுப்பாட்டுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்ற இந்த சூழலில் லாரிகளில் கொண்டு வந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தெருத்தெருவாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் குடிநீர் லாரிகளில் நீரை விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

water


இந்நிலையில் திருமுல்லைவாயிலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அங்குள்ள மக்களுக்கு குடிநீர் இலவசமாக குடிநீர் வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பொறித்த பனியன்களை அணிந்து கொண்டு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக குடிநீரை வினியோகித்தது வந்தனர். ஏராளமான பெண்கள் குடங்களுடன் வந்து தண்ணீர் எடுத்துச் சென்றனர். இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பலராமன் என்பவர் இலவசமாக குடிநீர் வழங்குவதை தடுத்து நிறுத்தினார். 

 

water

 

கட்சி சார்பில் வழங்கப்படுவதால்தானே தடுக்கிறீர்கள் எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் அணிந்து இருந்த நாம் தமிழர் சின்னம் பொறித்த பனியனை கழட்டிவிட்டு குடிநீர் விநியோகிக்க அனுமதிக்குமாறும் கேட்டனர். ஆனாலும் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது. முன்னாள் கவுன்சிலர் பலராமன் அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலீஸ் அனுமதி இல்லாமல் எப்படி தண்ணீர் வினியோகிக்கலாம் என்று கேள்வி கேட்டு தண்ணீர் லாரியை பறிமுதல் செய்ததோடு நாம் தமிழர் கட்சியினரை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதற்கு அங்குள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்நிலையத்தில் வைத்து குடிநீர் லாரிக்கு அனுமதி உள்ளதா, குடிநீர் தரமாக உள்ளதா, எங்கிருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டது என்பது எல்லாம் விசாரித்து விட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும் என்றால் 3 நாட்களுக்கு முன்பாக தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு அந்த பகுதியில் மீண்டும் குடிநீர் வழங்கியதாகவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.