Skip to main content

பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை: மாற்று ஏற்பாடாக குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் பணி தீவிரம்

Published on 05/08/2019 | Edited on 05/08/2019

 


தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாநிலத்தின் பிற பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள தடையைக் காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சில வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.   நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் 17 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

w

 

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சிகளில் ஒன்றாக, சென்னை ஐகோர்ட்டும், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

இந்த உத்தரவை ஏற்று, நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 1 லிட்டர் அளவிலான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாடு, விற்பனைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

முதல் கட்டமாக, இந்த தடை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பகுதிகளில் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மாவட்டத்தில் தற்போது 70 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்