Was the district magistrate sent on leave for buying a small parcel? in chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஜனவரி 27ஆம் தேதி சாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா நடைபெற்றது இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆளுநர் சிதம்பரம் நகருக்கு வருவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தியிடம் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பொக்கை(பூங்கொத்து)ஒன்று வாங்க கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி, அவர் ஆளுநரை வரவேற்க சிறிய அளவிலான பொக்கையை வாங்கியுள்ளார்.

அப்போது இதனைப் பார்த்து கடுப்பான கலெக்டர், கவர்னருக்கு பொக்கையை கொடுக்காமல் புத்தகத்தை கொடுத்து வரவேற்றுள்ளார். பின்னர் பெரிய அளவில் பொக்கை ஒன்று வாங்கி வர கூறி, ஆளுநர் செல்லும் போது அந்த பொக்கையை கொடுத்து வழி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் சிறிய அளவில் பொக்கை வாங்கிய வட்டாட்சியர் ஹேமா ஆனந்தியை மூன்று மாதம் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திய தாகவும், அதன் அடிப்படையில் அவர் விடுமுறையில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை தொடர்பு கொண்ட போது அவர் தொடர்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தியிடம் கேட்பதற்காக தொடர்பு கொண்ட போது அவரது தொலைபேசி எண்ணும் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது.