Skip to main content

"ஐயா, என் வீட்ட காணும்!" - போலீஸ் ஸ்டேஷனை அதிரவைத்த கூலித் தொழிலாளி!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Wage worker who complained to the police to find the house ...!

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிட்டு என்பவரது மகன் தண்டபாணி(45). இவருக்குச் சொந்தமான குடிசை வீடு இருவேல்பட்டு ஊரில் இருந்துள்ளது. இவர் பிழைப்புக்காக சென்னையில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து பிழைத்து வந்துள்ளார். கரோனா நோய்ப் பரவல் காரணமாக சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் சொந்த ஊரில் வந்து தனது குடிசையில் தங்கி அப்பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து இவரை தேடிவந்த அதிகாரிகள் “உங்களது குடிசை வீட்டை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளோம், தாங்கள் கூரை வீட்டை இடித்துவிட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர். அதிகாரிகளின் பேச்சை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி, இருந்த கூரை வீட்டையும் விட்டு விட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார் தண்டபாணி.

 

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகட்டும் திட்டத்தில் தரவேண்டிய பணத்தையும் அதற்கான அனுமதியையும் கேட்டு நடையாய் நடந்தார். திருவெண்ணைநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தண்டபாணி சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தண்டபாணியிடம், ஏற்கனவே உங்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதற்கான அரசு உதவிப் பணமும் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளனர்.

 

Wage worker who complained to the police to find the house ...!

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தண்டபாணி “எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவில்லை எனது வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பவில்லை, அதற்காக நான் எந்த டாகுமென்ட்களிலும் கையெழுத்துப் போடவில்லை. அப்படியிருக்கும்போது எனது வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறீர்களே, இது என்ன விந்தை" என்று விளக்கம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு தடுமாறிய அந்த அலுவலக அதிகாரிகள் இல்லை இல்லை, உங்கள் வீடு கட்டுவதற்கான உத்தரவை ஒரு வாரம் பின்னர் வந்து வாங்கிச் செல்லுங்கள் வீடு கட்டும் பணியைத் தொடங்குங்கள், வீடு கட்டுவதற்காக அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை அடுத்தடுத்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறோம் என்று சமாதானம் கூறி அனுப்பியுள்ளனர்.

 

இதை நம்பி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி வீட்டுப் பணியைத் தொடர்ந்து செய்து வந்த தண்டபாணி மீண்டும் அதிகாரிகளைத் தேடி திருவெண்ணைநல்லூர் அலுவலகம் சென்றார். வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும், வீடு கட்டும் பணிக்கான பணத்தையும் கேட்டுள்ளார். இப்படி ஒரு முறை அல்ல, பல முறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும், அதிகாரிகள் தண்டபாணிக்கு வீடு கட்டும் பணி உத்தரவும் வழங்கவில்லை, அதற்கான நிதியும் வழங்கவில்லை. இதனால் நொந்துபோன தண்டபாணி அதிகாரிகளின் பேச்சை நம்பி, இருந்த குடிசை வீட்டையும் இடித்துவிட்டு வட்டிக்குக் கடன் வாங்கி தொடர்ந்த வீடுகட்டும் பணியும் அரைகுறையாக நிற்கிறது.

 

வட்டி கட்ட முடியவில்லை. அதிகாரிகளோ என் வீடு ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எனவே, எனது வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தண்டபாணி புகார் அளித்துள்ளார். போலீஸார் அவரது புகாரை ஏற்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாத வீட்டை கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என் பெயருக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை. பணமும் அனுப்பவில்லை. அப்படியானால், என் பெயரில் யாருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள். அதற்கான பணத்தை யாரிடமும் கொடுத்தார்களா அல்லது வீட்டைக் கட்டாமலேயே கட்டியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டிக் கொண்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் தண்டபாணி. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.