Skip to main content

"ஐயா, என் வீட்ட காணும்!" - போலீஸ் ஸ்டேஷனை அதிரவைத்த கூலித் தொழிலாளி!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Wage worker who complained to the police to find the house ...!

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுகா இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிட்டு என்பவரது மகன் தண்டபாணி(45). இவருக்குச் சொந்தமான குடிசை வீடு இருவேல்பட்டு ஊரில் இருந்துள்ளது. இவர் பிழைப்புக்காக சென்னையில் தங்கியிருந்து கூலி வேலைசெய்து பிழைத்து வந்துள்ளார். கரோனா நோய்ப் பரவல் காரணமாக சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் சொந்த ஊரில் வந்து தனது குடிசையில் தங்கி அப்பகுதியில் கூலி வேலை செய்து பிழைத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து இவரை தேடிவந்த அதிகாரிகள் “உங்களது குடிசை வீட்டை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு ஒதுக்கியுள்ளோம், தாங்கள் கூரை வீட்டை இடித்துவிட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர். அதிகாரிகளின் பேச்சை நம்பி வட்டிக்கு கடன் வாங்கி, இருந்த கூரை வீட்டையும் விட்டு விட்டு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார் தண்டபாணி.

 

மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகட்டும் திட்டத்தில் தரவேண்டிய பணத்தையும் அதற்கான அனுமதியையும் கேட்டு நடையாய் நடந்தார். திருவெண்ணைநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தண்டபாணி சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் தண்டபாணியிடம், ஏற்கனவே உங்கள் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதற்கான அரசு உதவிப் பணமும் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளனர்.

 

Wage worker who complained to the police to find the house ...!

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தண்டபாணி “எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் வரவில்லை எனது வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்பவில்லை, அதற்காக நான் எந்த டாகுமென்ட்களிலும் கையெழுத்துப் போடவில்லை. அப்படியிருக்கும்போது எனது வீடு கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறீர்களே, இது என்ன விந்தை" என்று விளக்கம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு தடுமாறிய அந்த அலுவலக அதிகாரிகள் இல்லை இல்லை, உங்கள் வீடு கட்டுவதற்கான உத்தரவை ஒரு வாரம் பின்னர் வந்து வாங்கிச் செல்லுங்கள் வீடு கட்டும் பணியைத் தொடங்குங்கள், வீடு கட்டுவதற்காக அரசு ஒதுக்கீடு செய்த பணத்தை அடுத்தடுத்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறோம் என்று சமாதானம் கூறி அனுப்பியுள்ளனர்.

 

இதை நம்பி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி வீட்டுப் பணியைத் தொடர்ந்து செய்து வந்த தண்டபாணி மீண்டும் அதிகாரிகளைத் தேடி திருவெண்ணைநல்லூர் அலுவலகம் சென்றார். வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும், வீடு கட்டும் பணிக்கான பணத்தையும் கேட்டுள்ளார். இப்படி ஒரு முறை அல்ல, பல முறை அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும், அதிகாரிகள் தண்டபாணிக்கு வீடு கட்டும் பணி உத்தரவும் வழங்கவில்லை, அதற்கான நிதியும் வழங்கவில்லை. இதனால் நொந்துபோன தண்டபாணி அதிகாரிகளின் பேச்சை நம்பி, இருந்த குடிசை வீட்டையும் இடித்துவிட்டு வட்டிக்குக் கடன் வாங்கி தொடர்ந்த வீடுகட்டும் பணியும் அரைகுறையாக நிற்கிறது.

 

வட்டி கட்ட முடியவில்லை. அதிகாரிகளோ என் வீடு ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எனவே, எனது வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கூறி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் தண்டபாணி புகார் அளித்துள்ளார். போலீஸார் அவரது புகாரை ஏற்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டாத வீட்டை கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என் பெயருக்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை. பணமும் அனுப்பவில்லை. அப்படியானால், என் பெயரில் யாருக்கு வீடு கட்டிக் கொடுத்தார்கள். அதற்கான பணத்தை யாரிடமும் கொடுத்தார்களா அல்லது வீட்டைக் கட்டாமலேயே கட்டியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டிக் கொண்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் தண்டபாணி. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.