publive-image

Advertisment

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்து முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலையை இன்று (27.11.2023) காலை 11 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்வில் மேடையில் தமிழக முதல்வர் பேசுகையில், ''வி.பி.சிங்குக்கு உத்தர பிரதேசம் தாய் வீடு என்றால் தமிழ்நாடு தான் தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் அவர் பேச்சே இருக்காது. அதனால் தான் அப்படிப்பட்ட தந்தை பெரியாருடைய சமூக நீதி மண்ணில் வி.பி.சிங்குக்கு முதல் முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. நானும் மரியாதைக்குரிய வி.பி.சிங்கும் இரண்டு முறை சந்தித்திருக்கிறோம். முதல் சந்திப்பு 1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணியின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. அப்பொழுது இளைஞர் அணி சார்பில் மாபெரும் ஊர்வலத்தை நான்தான் தலைமை தாங்கி நடத்தி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கெடுத்த அந்த ஊர்வலத்தை இதே அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி, அன்றைக்கு ஆர்ட்ஸ் காலேஜ் என்று சொல்வார்கள். அந்த கல்லூரி பக்கத்தில் மேடை அமைத்து பேசினோம்.மாலை தொடங்கி இரவு வரை மேடையில் இருந்தபடியே வியந்தபடி பார்த்து வாழ்த்தினார் வி.பி.சிங்.

Advertisment

அப்பொழுது நான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த சந்திப்பு அவர் பிரதமரானபோது டெல்லிக்குப் போன எம்.எல்.ஏ குழுவில் நானும் இருந்தேன். எல்லா கட்சி எம்.எல்.ஏக்கள் அந்த குழுவில் இருந்தார்கள். நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது ஒவ்வொருத்தராக அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். என்னிடம் வந்த பொழுது என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார் ''இவரை எப்படி மறக்க முடியும்' இவர் தான் சென்னையில் இளைஞர் படையைநடத்தினார்'' என்று மறக்காமல் பாராட்டினார். வி.பி.சிங்கின் அந்த பாராட்டு என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இன்று நான் முதலமைச்சராக பொறுப்பேற்று அவருக்கு சிலை திறந்து இருக்கிறேன் என்றால், இதைவிட என்ன பெருமை எனக்கு வேண்டும்'' என்றார்.