தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்று (19/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்கிய மின்னணு முறையிலான வாக்குப்பதிவு மாலை 06.00 மணி வரை நடைபெற்றது. மாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்தனர்.

Advertisment

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சியில் 1,369 இடங்கள், நகராட்சியில் 3,824 இடங்கள், பேரூராட்சிகளில் 7,409 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததால், அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அவை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. பதிவான வாக்குகள் வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய பதவியேற்பு மார்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. பின்னர், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டப் பதவிகளுக்கு வரும் மார்ச் 4- ஆம் தேதி அன்று மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisment