தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (09/10/2021) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 6,652 வாக்குச்சாவடிகளில் 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஏற்கனவே, 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளும் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
விடுபட்ட 789 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு!
தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 28 மாவட்டங்களில் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், 40 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கும், 106 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 630 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.