Skip to main content

வாக்கு எண்ணும் மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு! - பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

vote counting centres chidambaram police and journalist

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் தினமும் கண்காணிப்பு அறைக்குச் சென்று காணொளி காட்சி மூலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர். 

 

அதேபோல், அவ்வப்போது வேட்பாளர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (21/04/2021) சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன், புவனகிரி சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழித் தேவன் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிடச் சென்றபோது அவருடன் சிதம்பரம் பத்திரிகையாளர்கள் அனைவரும் புகைப்படம் எடுக்கச் சென்றனர். 

 

vote counting centres chidambaram police and journalist

 

அப்போது பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. சரவணகுமார் பத்திரிகையாளர்களைப் பார்த்து ஒருமையில் திட்டி வெளியேறுங்கள் என மிரட்டியுள்ளார். மேலும், அதிகார தோரணையில் 'வெளியே போ' என ஒருமையில் பேசினார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே சென்றுவர எங்களுக்கு 24 மணி நேரமும் அனுமதி உண்டு என்று கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பத்திரிகையாளர்கள், ஏ.டி.எஸ்.பி. சரவணகுமாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க போரட்டத்தை முடித்துக் கொண்டனர். ஏ.டி.எஸ்.பி.யின் செயல்பாட்டுக்குப் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, "எங்களுக்கு மாவட்டத் தேர்தல் அலுவலர் என்ன உத்தரவு கொடுத்துள்ளாரோ அதன்படி தான் செயல்படுகிறோம். எனவே, மாவட்டத் தேர்தல் அலுவலரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே பத்திரிகையாளரை உள்ளே அனுமதிக்க முடியும். அனுமதி இல்லாமல் உள்ளே வந்ததால் பத்திரிகையாளர்களை வெளியேற்றினோம். இதில் எங்கள் தவறு ஒன்றும் இல்லை" என்கின்றனர்.

 

அதேபோல் சிதம்பரம் பத்திரிகையாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரமேஷ் கூறுகையில், "பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு என்று தனி அனுமதி கிடையாது. அனைத்து இடங்களுக்கும் அனுமதி உண்டு. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ளே என்ன நடைபெறுகிறது என்பதை வெளியில் சொல்வதற்காகத்தான் பத்திரிகையாளர்கள் உள்ளே செல்கிறார்கள். பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் உள்ளே என்ன நடப்பது என்பது மக்களுக்குத் தெரியாது. எனவே தேர்தல் ஆணையம், பத்திரிகையாளரை காவல்துறையினர் தடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.