ஒரு பக்கம் மதங்களால் பிரித்தாளப்பட்டாலும், சாதாரண மக்களிடம் மனிதநேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, மற்றும் சுகாதார பணியாளர்கள் இணைந்து இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்து வருகின்றனர். கரோனா தொற்றால் இறப்பவர்களைக் கண்டு அனைவரும் அச்சப்படும் நிலையில், சில தன்னார்வாளர்கள் மனமுவந்து அச்சம் தவிர்த்து, உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இதில் ஒரு அமைப்பு தமுமுக.
நேற்று, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரின் உறவினரும் பட்டுக்கோட்டை நகரில் பிரபலமாக வாழ்ந்தவர் ஒருவர் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரது உடல் அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வந்தாலும் கூட உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையால், மதுக்கூர் தமுமுக தன்னார்வலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கரோனா பாதுகாப்பு உடைகளுடன் சென்று உடலைப் பெற்று அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்று உறவினர்கள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த மனிதநேய செயலைப் பார்த்த உறவினர்கள் தன்னார்வலர்களை மனமுவர்ந்து பாராட்டினார்கள். இதை காணும்போது மதங்களைவிட மனிதநேயம் வாழ்கிறது என்பது காட்டுகிறது.