Skip to main content

வ.உ.சி. துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் 5 பேருக்கு நோட்டீஸ்

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
voc

 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இடைக்கால தடை கோரிய வழக்கில், மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

நெல்லையை சேர்ந்த முத்துராமன்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் இயங்கிவருகின்றது.

 

தூத்துக்குடி துறைமுகத்தில் கடந்த 2007 ஆண்டு 15.8 மில்லியன் டன் சரக்கு கையாள அனுமதி பெற்றுவிட்டு,தற்போது ஆண்டுக்கு ஆண்டு சரக்கு கையாளுவது அதிகரித்துள்ளதாகவும்,கடந்த 2016-17 ஆகிய ஆண்டில் 44.94  மில்லியன் டன் சரக்கு கையாண்டுள்ளனர்.   அனுமதிக்கப்பட்ட அளவைவிட சரக்கு கையாளுவதால் சுற்றுசூழல் அதிக மாசடைந்து வருகின்றது.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டதில், துறைமுகத்தில் சுற்றுசூழல்துறையின் பாதுகாப்பு விதிமுறைகளை  அமல்படுத்தவில்லை என ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.  கடந்த 2013 ஆண்டு உச்சநீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவில்,தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் நீண்ட நாட்களாக ஒப்புதல் இன்றி செயல்பட்டதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் தொழிற்சாலைகளால் நிரம்பி வழிகிறது. மேலும் தொழிற்சாலைகள் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் முத்துநகரம் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாசடைந்த மாநகரம் என அழைக்கப்படுகிறது.  மாசு தன்மை அதிகமாக இருப்பதால் நகர்பகுதிகளில் விஷத்தன்மை அடைந்துள்ளது. எனவே தூத்துக்குடி துறைமுகம் செயல்பட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, " மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறை செயலாளர் , மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட மாசுகட்டுபாட்டு வாரிய பொறியாளர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் தலைமறைவு; ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
serial absconding; Lookout notice for Rajesh Das

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த  வழக்கு பல்வேறு நிலைகளை கடந்து நடைபெற்று வந்த நிலையில் இறுதியாக சரணடைய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் சரணடைய அவகாசம் கோரி ராஜேஷ் தாஸ் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ்தாஸ் தலைமறைவானார். கடந்த 9 ஆம் தேதி அவரை கைது செய்ய போலீசார் சென்னை தையூர் கோமநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அதன்பிறகு வீட்டின் வாயில் காவலாளிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.  

தற்போது வரை ராஜேஷ் தாஸ் தலைமறைவாக உள்ள நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட்  நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.