Skip to main content

நிறைவேறாத விவேக்கின் கனவு... உருகும் ரசிகர்கள்...

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

vivekh's unfulfilled dream

 

திரைப்பட நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொண்ணூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத நகைச்சுவை நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர்; நகைச்சுவையான நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.

 

திரையில் சமூக கருத்துகள் பேசுவதோடு நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் சமூகத்தின் நலனுக்காக உழைத்தவர் விவேக். பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாகக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றிற்காகவும் பாடுபட்டார் விவேக். இந்நிலையில், விவேக்கின் உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது நிறைவேறாத ஒரு கனவு குறித்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

 

சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக உழைத்த விவேக், தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தார். இதற்காக அவர் கடினமாக உழைத்தும் வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை சுமார் 33.23 லட்சம் மரக்கன்றுகளை விவேக் நட்டுள்ளார். அவரது கனவான ஒரு கோடி மரங்கள் என்ற இலக்கினை அடைவதற்குள் விவேக் உயிரிழந்துள்ள நிலையில், அவரது இந்த கனவு நிறைவேறாமலேயே அவர் நம்மைப் பிரிந்துவிட்டார் என ரசிகர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் உருக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.