Skip to main content

இந்திய பொருளாதார சங்கத்தின் தேசிய மாநாடு. வேலூர்க்கு கவர்னர் புரோகித் வருகை...

Published on 26/12/2018 | Edited on 26/12/2018
banwarilal prohit

 


இந்திய பொருளாதார சங்கத்தின்( Indian Economic Association) 101வது வருடாந்திர தேசிய மாநாடு வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் வளாகத்தில் டிசம்பர் 27ந்தேதி தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது. 27ந்தேதி காலை இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளதாக இச்சங்கத்தின் தேசிய தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 


சென்னை பல்கலைக்கழகத்தின் முதல்  இந்திய பொருளாதார பேராசிரியர் முனைவர் கில்பர்ட் ஸலேட்டர், மும்பை மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெர்சி ஆன்ஸ்டே, கல்கத்தா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சி.ஜெ.ஹாமில்டன் மற்றும் சென்னை பொருளாதார சங்கத்தின் துணையுடன் 1917ம் ஆண்டில் இந்திய பொருளாதார சங்கத்தினை தொடங்கினார்.


100 ஆண்டுகளை கடந்து விட்ட இச்சங்கத்தின் தேசிய தலைவர்களாக பொருளாதார நிபுணர்களான இந்தியாவின் முன்னாள் பிரதமர் முனைவர் மன்மோகன்சிங் , நோபல் பரிசு பெற்ற முனைவர் அமர்த்தியா சென், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்கள்  முனைவர் ஐ.ஜி.பட்டேல், முனைவர் சி.ரங்கராஜன், முனைவர் ஓய்.வி.ரெட்டி, உலக வங்கியின் மேனாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு ஆகியோர் உட்பட பலர் பொறுப்பு வகித்துள்ளனர்.


கடந்த 2017 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டுரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27ந்தேதி முதல் 29ந்தேதி வரை   இச்சங்கத்தின்  முதல் நூற்றாண்டு விழா மாநாடு நடைபெற்றது. ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைதிக்கான நோபல் விருது பெற்ற முகமது யூனூஸ், கிராமின் வங்கி நிறுவனர் முனைவர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மாநாட்டினை தொடங்கி வைத்தார். அந்த மாநாட்டில் இந்திய பொருளாதார சங்கத்தின் தேசிய தலைவராக விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.


இச்சங்கத்தின் 101வது ஆண்டு மாநாடு வரும் 27ந்தேதி தொடங்கி 29 வரை 3 நாட்கள் விஐடி பல்கலைக்ழகத்தில் நடைபெறுகிறது. விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளியின்   (VIT School of Social Sciences and Language)  வணிகவியல் துறை (Dept of Commerce) இந்த மாநாட்டை  ஏற்பாடு செய்துள்ளது. 27ந்தேதி அன்று காலை 11.30 மணியளவில் இம்மாநாட்டை சங்கத்தின் தேசிய தலைவரும் விஐடி வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். இந்தியா முழுவதிலுமிருந்து இந்த மாநாட்டில் பொருளாதார நிபுணர்கள் பேராசிரியர்கள் பெருமளவில் வந்து பங்கேற்கின்றனர்.


இதற்காக தமிழக – ஆந்திரா எல்லையிலும், பல்கலைக்கழகத்தை சுற்றிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்