Skip to main content

எம்ஜிஆருக்கு பிடிக்காத விசில் சத்தம் அதிமுக அமைச்சர்களுக்கு பிடிப்பது ஏனோ?

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

எம்ஜிஆர் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று ஆளும் கட்சியின் முதல்வர் முதல் மந்திரிகள் வரை எப்போதும் அடிக்கடி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆருக்கு பிடிக்காத விசில் சத்தத்தை அதிமுக மந்திரிகள் மிகவும் விரும்புவது ஏனோ தெரியவில்லை. எம்ஜிஆருக்கு விசில் சத்தம் பிடிக்காது என்பது இவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

 

visel issue - MGR - ADMK Ministers

 



சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அரசு பள்ளியில் நடந்த பிறந்தநாள் விளையாட்டு பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் சிலர் விசில் அடித்தனர். இதைப்பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு எம்எல்ஏ ஆறுமுகத்துக்கும் பள்ளி மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி நடத்தப்படும் இதில் அதிக சத்தத்துடன் விசில் அடிப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என்றார். இதில் அதிக சத்தத்துடன் விசில் அடித்து பள்ளி மாணவி ஒருவர் வெற்றி பெற்றார்.

கடந்த வாரம் விருதுநகர் வத்திராயிருப்பு அருகே சுந்தரபாண்டியத்தில் ஜெ பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான் மண்டை உடைப்பு உள்ளிட்ட 16 வழக்குகளை சந்தித்தவர். அதனால்தான் மந்திரியானேன். அதிமுகவினர் காந்தி கைபிடித்து வந்தவர்கள் அல்ல. எம்ஜிஆர் கைபிடித்து வந்தவர்கள் வீரத்தோடு தான் இருப்போம். அதிமுக-காரன் விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்து எறிவான் என்றார்.

 



ஆனால் எம்ஜிஆருக்கு விசில் அடிப்பது பிடிக்காது என்பதற்கு பழைய காரணத்தை அவருடைய தொண்டர்கள் சொல்கிறார்கள். அது என்னவென்றால் 1980 ஆண்டு மே மாதம் சட்டசபை இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை சென்றபோது பஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்ட மேடையில் எம்ஜிஆர் ஏறியபோது அதிமுக தொண்டர்கள் சுமார் 30 நிமிடம் இடைவிடாமல் விசில் அடிக்க ஆரம்பித்தனர். இதனால் மற்ற தலைவர்கள் தங்கள் பேச்சை அவசர அவசரமாக முடித்துக்கொண்டனர்.

இதைப்பார்த்து இறுகிய முகத்துடன் எம்ஜிஆர் மைக்கை பிடித்தார். அவர் பேசத் தொடங்கியதும் மீண்டும் விசில் சத்தம் விண்ணை பிளந்தது. எம்ஜிஆர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். காது கிழியும் வண்ணம் விசில் அடித்த அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர் அமைதியாக இருப்பதைப் பார்த்தும், அவர் முகம் கோபமாக இருப்பதை பார்த்தும் அமைதியாகினர். 

 



கூட்டம் அமைதியான பின்பு எம்ஜிஆர் பேசுகையில் விசில் அடிப்பது கெட்ட பழக்கம் எனது தொண்டர்கள் யாரும் இனி விசில் அடிக்க கூடாது. விசில் அடிப்பதாக இருந்தால் நான் கூட்டத்தில் பேச மாட்டேன் என தெரிவித்தார். 

உடனே தொண்டர்கள் இனி விசில் அடிக்க மாட்டோம் என்று கோஷமிட்டனர். ஆனால் எம்ஜிஆர் வெறுத்த விசில் சத்தத்தை இப்போது அமைச்சர்கள் ஊக்குவித்து வருகிறார்கள். எம்ஜிஆருக்கு விசில் அடிப்பது பிடிக்காது என்பது ஏனோ அமைச்சர்களுக்கு தெரியவில்லை. தற்போது எம்ஜிஆர் விரும்பாததை எல்லாம் செய்துகொண்டு எம்ஜிஆர் ஆட்சி என்று சொல்வது தான் வேதனை அளிக்கிறது என்கிறார் தீவிர எம்ஜிஆர் விசுவாசி ஒருவர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.