Skip to main content

அண்ணியாரே!  கண்ணாடி முன் நின்று கண் திறந்து பாருங்கள்! - தேமுதிக அனுதாபியின் குமுறல்!

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தக் கேப்டன் ரசிகர் தேமுதிக அனுதாபியும் கூட. ஆனாலும், விஜயகாந்த் குடும்ப ஆதிக்கத்தினால், கடந்த சில ஆண்டுகளாக விலகியே நிற்கிறார்.  கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அக்கட்சியின்  கடந்த கால நடவடிக்கைகளை அலசி ஆராய்ந்து தனது ஆதங்கத்தை, தேமுதிக தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்மிடம் மனம் திறந்தார்.

 

p


"தேமுதிக டபுள் கேம் ஆடுவது புதிது அல்ல. 2014-ல் எல்லா கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்த நேரம். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் விஜயகாந்த். திடீரென கட்சி எம்.எல்.ஏக்களை எல்லாம் அழைத்துக் கொண்டு பிப்.13-ந்தேதி டெல்லி சென்றார். தமிழகத்தின் பிரச்சனைகள் என்று மிகப் பெரிய பைல் ஒன்றை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வழங்கினார் விஜயகாந்த்.

 

'உங்கள் மாநிலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா? இதுபற்றி உங்கள் முதல்வர்(ஜெ.) எதுவும் என்கிட்ட சொல்லலையே என்று ஆச்சரியப்பட்ட பிரதமர், முடிந்தவரைக்கும் தீர்வு காண முயற்சிக்கிறேன்' என்றார்.

 

இந்த பயணத்தின்போது விஜயகாந்த் உடன் சென்றிருந்த மைத்துனர் சுதீஷ், 2014 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக  பிஜேபி தரப்பிடம் பேச முயற்சித்தார். இதனால், ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

இதற்கிடையே, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அகமது பட்டேலை பிரேமலதாவும், சுதீஷூம் சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் கூட்டணியில் சேர, தேமுதிக தரப்பு வைத்த கோரிக்கைகளை கேட்டு அகமது படேலுக்கு மயக்கம் வந்து விட்டதாம். அந்த அளவுக்கு பெரிய கோரிக்கை பட்டியலை முன்வைத்திருக்கின்றனர்.

 

"என்னடா இது, நம்மகிட்ட அப்பாய்ன்ட் மென்ட் வாங்கிட்டு, அங்கிட்டு பேசிட்டு இருக்காங்க, இந்த பாலிடிக்சே வினோதமாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட்ட ராஜ்நாத்சிங், மூவரையும் சந்திக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார். 

 

அப்போது, டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி கேள்வி கேட்டபோது தான், மிகவும் ஆக்ரோஷமாக பேசி, கோபத்தின் உச்சிக்கே விஜயகாந்த் சென்றார். இப்போது, அதே மாதிரி அதிமுக, திமுக கூட்டணி என 2 சைடிலும் துண்டு போட்டு வைத்திருந்த தேமுதிக, கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டது என்ற விரக்தியிலே, வெறுப்பு அரசியலை பத்திரிக்கையாளர்கள் மீது அள்ளி தெளித்திருக்கிறது.

 

அரசியலில் கொஞ்ச முன்ன பின்ன இருக்கத்தான் செய்யும். 2005-ல் உருவான தேமுதிக, இப்போது வரை அனைத்து தேர்தலையும் சந்தித்து வந்திருக்கிறது. எனினும், 2009-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 

 

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கூட்டணிகளையும் எதிர்த்து 39 தொகுதிகளில் தே.மு.தி.க. தனித்து நின்றது. பெரும்பாலான தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள், கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். 31.26 லட்சம் ஓட்டுகள் வாங்கி 10.08 சதவிகிதம் வாக்குகளைக் கைப்பற்றியது தேமுதிக. அதாவது அந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்கு 10.1 சதவீதம். 25 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. 

 

p

 

பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மணிசங்கர் அய்யர், ஏ.கே.மூர்த்தி, தங்கபாலு, தா.பாண்டியன், சாருபாலா தொண்டைமான் போன்றோர் அப்போது நாடாளுமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததில் தேமுதிகவின் பங்கு அதிகம்.

 

விருதுநகரில் போட்டியிட்ட வைகோ, வெறும் 15 ஆயிரத்து 764 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். ஆனால், அந்த தேர்தலில் அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்றார்.

 

ஆனால், அடுத்த பத்தாண்டுகளில் தேமுதிகவின் வாக்கு வங்கி வெகுவாக சரிந்துவிட்டது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு (பிஜேபி கூட்டணியுடன் நின்று) 5.2 சதவீத வாக்கு கிடைத்தது. அதற்கு பிறகு நடைபெற்ற 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பெற்றது வெறும் 2.4 சதவீதம் மட்டுமே. (அதுவும் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து நின்றது)

 

இப்படி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை நிலையில் தேமுதிக இருப்பதால், எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்ற நிலைப்பாட்டை அதிமுகவும், திமுகவும் எடுத்துவிட்டது. எங்களிடம் சீட் இல்லை என்பதை நாகரீகமாகவே சொல்லிவிட்டார் துரைமுருகன். கூட்டணியில் சேர்வதும், சேராததும் அவர்களது விருப்பம் என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், இன்னும் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதை போல், வெறுப்பு அரசியலை பத்திரிக்கையாளர்கள் மீது வெளிப்படுத்தி வருகிறார் பிரேமலதா.

அண்ணியாரிடம் கண்ணாடி முன் நின்று பார்க்கச் சொல்லுங்கள் கட்சிக்காரர்களே! இது 2009 தேர்தல் அல்ல. 2019-ல் நடக்கின்ற தேர்தல் என்று!" எனச் சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார்.

 

கண்களை மூடிக்கொண்டு, உலகம் இருட்டாக இருக்கிறது என்று நினைத்ததாம் பூனை!  அப்படி ஒரு நிலையில தான் இருக்கிறார்கள் அக்கட்சியை தங்கள் இஷ்டத்துக்கு வழி நடத்திச் செல்பவர்கள்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.