Skip to main content

விதிகளை மீறி வீடுகளில் பட்டாசு தயாரிக்கிறார்கள்! விபத்தில் சிக்கிய குழந்தைகள்!  

Published on 09/05/2019 | Edited on 09/05/2019

 

 

உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனையால், விருதுநகர் மாவட்டத்தில்,  குறிப்பாக சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளை மூடி போராட்டமெல்லாம் நடந்தது. இதனைத் தொடர்ந்து,  பேரியம் மற்றும் பொட்டாசியம் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையாதவாறு பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான புதிய பார்முலா வரையறுக்கப்பட்டுள்ளது.  

 

a

 

பட்டாசு உற்பத்தியில் விதிகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பது உரிமம் பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்குத்தான். இதே மாவட்டத்தில் மீனாட்சிபுரம், விஜயகரிசல்குளம், தாயில்பட்டி போன்ற பகுதிகளில்,  வீடுகளில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிப்பவர்கள், சட்ட விதிகளுக்கெல்லாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலையீட்டின் காரணமாக, இவர்கள் மீது எந்தத் துறையும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், இந்தப் பகுதிகளில் விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. 

 

a

 

சாத்தூர் – தாயில்பட்டியை அடுத்துள்ள கலைஞர் காலனியில் முனியசாமி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி, சட்ட விரோதமாக, வழக்கம்போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். இன்று (8-5-2019) மாலை, தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக தீ பற்றி அந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டது. அருகிலுள்ள வீடுகள் மற்றும் தகர செட்டுகளுக்கும் மளமளவென தீ பரவியது. 

 

தகவலறிந்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி,  தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில், மூன்று வீடுகள் மற்றும் தகர செட்டுகள் முழுவதுமாக எரிந்துபோயின. அதனால், கலைஞர் காலனியைச் சேர்ந்த தர்ஷினி, கார்த்திகை லட்சுமி, விஜய வர்ஷினி, குருவுத்தாய், குருவம்மாள் என 5 பேர் காயமடைந்து தாயில்பட்டியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

a


வழக்கம்போல், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனும், மற்ற போலீஸ் அதிகாரிகளும் வெடிவிபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டுச் சென்றனர்.  இவ்வெடி விபத்து குறித்து வெம்பக்கோட்டை காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.  

 

“வீடுகளில் கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பது அத்தனை  அதிகாரிகளுக்கும் தெரியும். அபாயகரமான பட்டாசுத் தொழிலைக் குடிசைத் தொழில்போல வீட்டில் வைத்துச் செய்துகொண்டிருக்கும் இந்தப் பகுதி மக்களை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லை. ஏனென்றால், கள்ளத்தனமாகப் பட்டாசு தயாரிப்பவர்களை வாக்காளர்களாக மட்டுமே பார்க்கின்ற அரசியல்வாதிகள், நடவடிக்கை எடுக்க விடுவதில்லை.” என்கிறார்கள் சிவகாசி பட்டாசு உற்பத்தி யாளர்கள்.

இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேரில் குழந்தைகள் இருவர் என்பதுதான்!
 

சார்ந்த செய்திகள்

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.