Skip to main content

பூச்சி மருந்து குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை!

Published on 28/04/2021 | Edited on 28/04/2021

 

viruthu444

 

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

 

முஸ்டக்குறிச்சி கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் முனியம்மாளுக்கு மதன்குமார், முத்துமணி ஆகிய இரு மகன்களும், ஜெயலலிதா என்ற மகளும் உள்ளனர். முனியம்மாளின் கணவர் முத்துச்சாமி, கடந்த 7 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில், தன் தாய் அடைக்கலத்தை (வயது 70) தனி வீட்டில் வைத்துப் பார்த்து வருகிறார் முனியம்மாள். இரண்டு மகன்களும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். மகள் ஜெயலலிதாவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிழவனேரி கிராமத்தில் முத்துக்குமார் என்பவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது.

 

இந்நிலையில், முனியம்மாள் கடைக்குப் பொருட்களை வாங்க அப்பகுதி மக்கள் சென்றபோது கடை திறக்காமல் இருக்க, வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டில் முனியம்மாள் இருப்பதாக கருதி வீட்டின் கதவைத் தட்டினர். அப்போது, முனியம்மாளும் மகள் ஜெயலலிதாவும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு, அவருடைய தாயார் அடைக்கலம் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார். 

 

அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், முனியம்மாள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இறந்த நிலையில் கிடந்த இருவருக்கும் அருகில் பூச்சி மருந்தும் குளிர்பான பாட்டில்களும் இருந்துள்ளன.

 

போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் (26/04/2021) இரவு முனியம்மாள், வீட்டில் பருத்தி, கடலை போன்ற பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குளிர்பானங்களில் கலந்து, தன் தாயார் அடைக்கலத்துக்கும், தனக்கும், தன் மகள் ஜெயலலிதாவுக்கும் கலந்து கொடுத்துள்ளதும், மூன்று பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது. தான் உயிரைவிட முடிவு செய்தவுடன், தனது தாயார் அடைக்கலத்துக்கும் குளிர்பானம் கலந்த பூச்சி மருந்தைக் கொடுத்திருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தக் கிராமத்தினரிடையே, பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூவரும் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.