கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தே.புடையூரில் மருத்துவக் கழிவுகளை அழித்து மறுசுழற்சி செய்வதற்கான ஆலை தனியார் நிறுவனம் மூலம் திறக்கப்பட உள்ளது. இந்த ஆலையின் மூலம் வெளிவரும் நச்சுப்புகை மற்றும் கழிவுநீரால் பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் ஆலையை திறக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் கொடுத்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் தமிழக அரசும், தனியார் நிறுவனமும் ஆலையை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அனைத்து கட்சிகளுடன் ஊர்வலமாக சென்று ஆலையை முற்றுகையிட சென்றனர். அப்போது காவல்துறையினர் ஆலைக்குள் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தியபோது, பெண்களுக்கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் தடையைமீறி பெண்கள் செல்லும்போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி சென்ற பொதுமக்கள் மருத்துவ கழிவு ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறையினர் அதிகாரிகளிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆதலால் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.