Skip to main content

விருத்தாசலம் அருகே இறுதி ஊர்வலத்தில் கைகலப்பு..! 

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

viruthachalam issue two parties

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் பரவலூர் ஊராட்சி மன்றத் தலைவராக பூமாலை என்பவர் பதவிவகித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலின்போது இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காந்தி என்பவர் தரப்பினருக்கும், பூமாலை தரப்பினருக்கும் இடையே தேர்தல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் காந்தி தரப்பை சேர்ந்த சன்னியாசி (85) என்பவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் அப்பகுதியில் உள்ள தெற்கு தெரு வழியாக நடந்தது.

 


அந்த  தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் சாலை மீது உடலை எடுத்து வரக்கூடாது என ஊராட்சி மன்றத் தலைவரான பூமாலை தரப்பை சேர்ந்தவர்கள் எச்சரிக்கும் தோனியில் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகி ஒருவரை ஒருவர் கழி, கத்தி, கட்டையால் தாக்கிக்கொண்டனர். அப்போது இறுதி ஊர்வலத்தில் வந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த  இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரும் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து, இறுதி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம்  போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மோதலுக்கு காரணமான ஊராட்சி மன்றத் தலைவர் பூமாலை உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்த விருதாச்சலம் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.